உ.பி.யில் கேப்பே விடாமல் வெளுத்த கன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் சட்டசபை- அவசரமாக வெளியேறிய யோகி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அம்மாநில சட்டசபைக்குள் வெள்ளம் பாய்ந்தோடுவதால் முழங்கால் அளவு நீரில்தான் அதிகாரிகள் செல்ல வேண்டிய துயர நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ளத்தில் மிதந்தபடியே வாகனங்கள் ஊர்ந்தும் செல்கின்றன.
இதனிடையே லக்னோவில் மாநில சட்டசபை வளாகத்துக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடி உள்ளது. சட்டசபையின் கீழ்தளத்தில் முழங்கால் அளவு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் இந்த கீழ் தள அலுவலகத்தில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இந்த கனமழை வெள்ளம் சட்டசபைக்குள் பாய்ந்தோடும் போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தமது அறையில்தான் இருந்தார். இதனையடுத்து அவசரம் அவசரமாக வேறொரு வாசல் வழியாக பாதுகாவலர்கள் யோகி ஆதித்யநாத்தை வெளியே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதனிடையே உத்தரப்பிரதேச சட்டசபை வளாகத்துக்குள் புகுந்த வெள்ள நீரை பக்கெட்டுகளில் அள்ளி அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியே கொட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முன்னர் சட்டசபைக்குள் வெள்ளம் பாய்ந்ததே இல்லை எனவும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் யாதவ், மாநில சட்டசபை வளாகத்தை மேம்படுத்த கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வெள்ள பாதிப்பு சுட்டிக்காட்டுகிறது. ஒரே ஒரு கனமழைக்கே இப்படி வெள்ளத்தில் மிதக்கிற நிலைமையில்தான் சட்டசபை இருகிறது. சட்டசபை வளாகத்தில் இருந்து வெள்ள நீரை அகற்றுவதற்கு அனைத்து தரப்பும் முயற்சித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது என பதிவிட்டுள்ளார்.











Click it and Unblock the Notifications