உ.பி. ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட வாரணாசி கோர்ட் அனுமதி- 7 நாட்களுக்குப் பின் பூஜைகள்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. ஞானவாபி மசூதியில் 7 நாட்களில் இந்துக்கள் பூஜைகளை தொடங்கலாம் என்பதும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவு.
அயோத்தியில் பாபர் மசூதியே ராமர் கோவில் மீது கட்டப்பட்டது என்பது இந்து தரப்பு வாதம். பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் அந்த நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்க தீர்ப்பளிக்கப்பட்டது. இதனடிப்படையில் பாபர் மசூதி இருந்த இடத்தில் புதியதாக ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல வாரணாசி ஞானவாபி மசூதியும் சர்ச்சையில் சிக்கியது. இந்து கோவிலை இடித்துதான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வாரணாசி நீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நடைபெற்று வருகிறது.
ஞானவாபி மசூதி, இந்து கோவிலை இடித்துதான் கட்டப்பட்டதா? என்பதை தொல்லியல் துறை கண்டறிய வாரணாசி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில் ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பது உள்ளிட்டவை விரிவாகவே விவரிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிவன், விஷ்ணு, ஹனுமன் சிற்பங்கள், சிலைகள், தூண்கள் என ஞானவாபி மசூதிக்குள் கிடைத்தவை குறித்து தொல்லியல் துறை அறிக்கையில் பட்டியலிடப்படிருக்கின்றன. இது இந்துக்கள் தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்தது. ஆனால் இதனை முஸ்லிம்கள் தரப்பு ஏற்க மறுத்தனர்.
இந்த நிலையில் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் 7 நாட்களுக்குப் பின்னர் ஞானவாபி மசூதி கீழ் பகுதியில் இந்துக்கள் பூஜைகளை நடத்தலாம் என்பதும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவாகும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications