டென்ஷனான மோடி! என் முகத்தை ஏன் மறைக்கிறீங்க? ரோடுஷோவில் வேட்பாளரை கடிந்துகொண்ட பிரதமர்! விலகிய தாமரை
லக்னோ: தேர்தல் பிரசாரத்துக்கான ரோடு ஷோவில் முகத்தை மறைத்ததால் பாஜக வேட்பாளர் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியடைந்தார். மேலும் முகத்துக்கு நேராக தாமரை சின்னத்தை கொண்டு வரக்கூடாது என்பது போல் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

நாளை 3வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரசார பொதுக்கூட்டம், ரோடு ஷோவில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். நம் நாட்டை பொறுத்தவரை லோக்சபா தேர்தல் என்றால் அதிக கவனம் பெறும் மாநிலம் உத்தர பிரதேசம் தான். ஏனென்றால் இந்த மாநிலத்தில் தான் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்றைய தினம் பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் மற்றும் அக்பர்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். கான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக ரமேஷ் அவஸ்தி, அக்பர்பூர் தொகுதியில் தேவேந்திர சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தான் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார்.
கான்பூரில் நடந்த ரோடு ஷோவில் பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பயணித்தார். அவருடன் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கான்பூர் வேட்பாளர் ரமேஷ் அவஸ்தி உள்ளிட்டவர்கள் நின்றனர். அவர்கள் பாஜகவின் தேர்தல் சின்னமான ‛தாமரை'யை கையில் வைத்து பிரசராம் செய்தனர்.
இந்த சமயத்தில் பாஜக வேட்பாளர், பிரதமர் மோடியின் முகத்துக்கு முன்பு தாமரை சின்னத்தை காட்டினார். இது மோடியின் முகத்தை மறைக்கும் வகையில் இருந்தது. இதனால் திடீரென்று டென்ஷனான பிரதமர் மோடி, பாஜக வேட்பாளரிடம், ‛‛தாமரை சின்னத்தை அந்தப்பக்கமாக காட்டி வாக்கு சேகரியுங்கள். என் முகத்துக்கு நேராக கொண்டு வராதீர்கள்'' என்பது போல் சைகை காட்டினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications