சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் சடலம்.. உயிருடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த அதிசயம்.. உறைந்து நின்ற போலீஸ்
இறந்த பெண் உயிருடன் எழுந்து வந்த அதிசயம் நடந்துள்ளது
லக்னோ: கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருடன் ஸ்டேஷனுக்கு வந்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு சூட்கேஸ் மர்மமாக விழுந்து கிடந்தது.. இதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து அந்த சூட்கேஸை மீட்டு திறந்து பார்த்தனர்.. அதற்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. யார் இப்படி சூட்கேசுக்குள் அடைத்து வைத்தார்கள் என தெரியவில்லை.

அதனால் அந்த பெண்ணின் அடையாளங்களை போலீசார் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தனர்.. அதை பார்த்ததும் அலிகரை சேர்ந்த பெண் ஒருவர், பதறி கொண்டு வந்தார்.. அது தன்னுடைய காணாமல் போன 24 வயது மகள்தான் என்றும், பெயர் வாரிஷா என்றும் சொன்னார்.. மேலும் மகளின் அடையாளங்களையும் சொன்னார்.
எதற்காக உங்கள் மகள் காணாமல் போனார் என்று போலீஸார் கேட்கவும், வீட்டில் மாமியார், கணவர் கொடுமைப்படுத்தினர், அவர்கள்தான் கொன்றுவிட்டனர் என்றார்.. இதையடுத்து, அவர் தந்த புகாரின்பேரில் வாரிஷாவின் கணவரும் மாமியாரும் கடந்த 28-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இப்படி சூட்கேஸில் இருந்த பெண் சடலம் யார் என்ன என்று கண்டுபிடித்து தண்டனையும் தந்ததற்காக காசியாபாத் போலீஸ் குழுவிற்கு 15 ஆயிரம் வெகுமதியும் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிலையில்தான், சூட்கேஸில் கிடந்த வாரிஷா திரும்ப உயிருடன் வந்துள்ளார்.. அவரை பார்த்து அதிர்ந்து போன போலீசார் உறைந்து நின்றனர்.
கணவரும், மாமியாரும் தன்னை கொடுமைப்படுத்தியது உண்மைதான் என்றும், அதனால், 24-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி போனதும் உண்மைதான், ஆனால் சாகவில்லை என்றார். ஒரு தனியார் கம்பெனியில் இப்போது வேலை பார்த்து வருவதாகவும் சொன்னார்.
பெண் உயிருடன் வந்தது போலீ சாருக்கு நிம்மதி என்றாலும், சம்பந்தப்பட்ட கணவனை, மாமியாரை ஜெயிலில் அடைத்த திருப்தி உள்ளது என்றாலும், அந்த சூட்கேசுக்குள் இருந்த பெண் யார் என்று இப்போது தெரியவில்லை.. அதனால் காசியாபாத் போலீசார் மறுபடியும் தலையை பிய்த்து கொண்டு, அந்த பெண் யார் என்ற விசாரணையில் இறங்கி உள்ளனர்.
அதுமட்டுமல்ல, தவறான சடலத்தை காட்டியதற்காக வாரிஷாவின் அம்மா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் போகிறார்களாம்!












Click it and Unblock the Notifications