"ஒன்னுமே புரியலையே" சேற்றை வாரி இரைத்த உ.பி பெண்கள்! மகிழ்ச்சியாக ஏற்ற பாஜக எம்எல்ஏ! குழம்பிய மக்கள்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் மீது அப்பகுதி மக்கள் சேற்றை வாரி இரைத்துள்ளனர்.
Recommended Video
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் அங்கு நடந்த தேர்தலில் பாஜக வென்று இருந்தது.
மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வென்று இருந்தது. சமாஜ்வாடி கட்சியால் 111 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெண்கள் சிலர், அப்பகுதி எம்எல்ஏ மீது சேற்றை வாரி இரைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பெண்கள் ஏன் இப்படிச் செய்தார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

சேற்று குளியல்
மஹராஜ்கஞ்ச் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வருகிறது. இந்நிலையில், இந்திர தேவரை மகிழ்விக்கும் வகையில் பெண்கள் சிலர் உள்ளூர் பாஜக எம்எல்ஏ ஜெய்மங்கள் கனோஜியா மற்றும் நகர் பாலிகா தலைவர் கிருஷ்ண கோபால் ஜெய்ஸ்வால் ஆகியோர் மீது சேற்றை வாரி இரைத்து உள்ளனர். இப்படிச் செய்தால் மழை பெய்யும் என்பது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

காரணம்
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், "நகரின் தலைவர் மீது சேற்றை வாரி இரைப்பது இந்திர தேவரை மகிழ்விக்கும் என்பது நம்பிக்கை. சில காலமாகவே மழை பொய்து போவதால் நெல் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும், இந்திரனை மகிழ்விக்க, குழந்தைகளையும் சேற்றில் குளிக்க வைப்போம். இப்படிச் செய்தால் மழை சரியாகப் பெய்யும் என்பது எங்கள் நம்பிக்கை" என்றார்.

பாஜக நிர்வாகி
இதனை பாஜக எம்எல்ஏ கனோஜியாவும், நகர் சேர்மன் ஜெய்ஸ்வாலும் மகிழ்ச்சி உடன் ஏற்றுக் கொண்டனர். இது குறித்து பாஜக எம்எல்ஏ கனோஜி கூறுகையில், "சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மக்கள் அமைதியின்றி உள்ளனர். இந்திரனை மகிழ்விக்க சேற்று குளியல் செய்வது இப்பகுதி மக்களின் மரபு. இதனால் பெண்கள் மழைக்காக எங்களுக்கு மண் குளியல் கொடுத்தனர். இது பழங்கால வழக்கம் தானே தவிர வேறு எதுவும் இல்லை" என்றார்.












Click it and Unblock the Notifications