உயரும் வங்கி கடன் விகிதம்! பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் புது யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடன் மற்றும் வைப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் 100வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த கிளை கடந்த 1923ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இந்த நகரின் மக்கள் தொகை 50 ஆயிரத்திற்குள்தான் இருந்தது. ஆனால் தற்போது 20 லட்சமாக இது உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடன்- வைப்பு (சிடி) விகிதத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்த முக்கியத்துவத்தை வங்கிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். வங்கியின் டெபாசிட் மூலதனத்தில் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும், வளர்ச்சி செயல்முறையை விரைவுபடுத்தும். கடந்த ஆறு ஆண்டுகளில், கோரக்பூரில் தொழில்கள் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. நகரம் இப்போது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் புதிய தொழில்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.
தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் ஆதரவளிக்கும்போது தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும். இது பொருளாதார வளர்ச்சியில் பிரதிபலிக்கும். தற்போது, கோரக்பூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் டெபாசிட் மூலதனம் ரூ.11,500 கோடி. கடன்கள் ரூ.4,500 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளன. கிரெடிட்-டிபாசிட் (சிடி) விகிதம் 60 சதவீதத்தை எட்டினால், டெபாசிட் செய்யப்பட்ட மூலதனம் ரூ.25,000 கோடியாக உயரும். இந்த விரிவாக்கம் சமூக முன்முயற்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான வங்கியின் திறனை மேம்படுத்தும்.
கடந்த 2014க்கு பிறகு, அதாவது பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வங்கித் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்தன் கணக்குகளை தொடங்கி, ஆதாருடன் இணைப்பதன் மூலம் ஊழல்களை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இப்படி இருக்கையில் உத்தரப் பிரசேதத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடன் மற்றும் வைப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications