ஒன்றல்ல.. இனி இரண்டு! இலவச கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையை உயர்த்திய யோகி அரசு! உ.பி மக்கள் மகிழ்ச்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இரண்டு சிலிண்டர்களை இலவசமாக வழங்க மாநில அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இரண்டு சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டம் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். cmsvy.upsdc.gov.in எனும் போர்டலுக்கு சென்று விண்ணப்பம் செய்தால், மணப்பெண் எந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கிறாரோ அந்த மதத்தின் படி, மணப்பெண் குடும்பத்தின் பழக்கவழக்கப்படி திருமணம் செய்து வைக்கப்படும். திட்டத்தின் மூலம் பலன் பெற சில நிபந்தனைகள் இருக்கின்றன. அதாவது மணப்பெண்ணின் பெற்றோர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அதேபோல அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மணப்பெண்ணுக்கு கட்டாயமாக 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மணமகன் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் பெண்ணின் திருமணத்திற்கு ரூ.51,000 நிதி ஒதுக்கப்படும். இது தவிர பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.35,000 டெபாசிட் செய்யப்படும். மேலும் திருமண நிகழ்ச்சிக்கு ரூ.10,000 கூடுதலாகவும், ரூ.6,000 உணவு கட்டணமாகவும் கொடுக்கப்படும். இந்த திட்டத்திற்கு உ.பி முழுவதும் பரவலாக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இரண்டு இலவச கேஸ் சிலிண்டர் திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். ஏற்கெனவே பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு அடுப்பும், கேஸ் சிலிண்டரும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் முதல் கேஸ் சிலிண்டர் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். எனவே தற்போது இரண்டு சிலிண்டர்களை வழங்க உ.பி அரசு திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பான திட்டத்திற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications