“செங்கோலை எடுக்கனுமா? தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான கருத்து அது” கொந்தளித்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கருத்து தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான அவர்களின் அறியாமையை காட்டுகிறது என யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை. இந்த தேர்தலில் 400 தொகுதிகளை வென்று அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பாஜகவினர் முழங்கியிருந்த நிலையில், அக்கட்சி தனிப்பெரும்பான்மை பெறாதது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனவே பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோல் குறித்து விமர்சனங்கள் எழுந்தன. "மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழ்வது செங்கோல். எனவே செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும்" என்று சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "செங்கோல் நாடாளுமன்றத்தில் தமிழக ஆதினங்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. செங்கோல் என்பது நீதியின் அடையாளம். ஆனால் அதை அகற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி எம்.பி கூறியுள்ளார். இது தமிழக ஆதினங்களை அவமானப்படுத்தும் செயல். சமாஜ்வாதி எம்.பி.யின் கருத்திற்கு திமுகவின் பதில் என்ன" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, "இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும், தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா?.

தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சி அதனை எதிர்க்கிறது. அவர்கள் வெளிப்படையாக தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை அவமரியாதை செய்கிறார்கள்" என்று விமர்சித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சமாஜ்வாதி எம்பியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து x தளத்தில் தமிழில், "இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான INDI கூட்டணிக் கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.
'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications