'இது அதுல்ல..' யோகி ஆதித்யநாத் சாதனை விளம்பரத்தில் கொல்கத்தா மேம்பாலம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பாஜக வெளியிட்ட விளம்பரத்தில் கொல்கத்தா பாலத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு மொத்தம் ஏழு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்குகிறது. இதற்குத் தேவையான பணிகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டது.

யோகி அரசின் விளம்பரம்
இந்தியாவிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யோகி அரசு மேற்கொண்ட திட்டங்களை விளக்கும் வகையிலான விளம்பரங்களை பாஜக வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று 'Transforming Uttar Pradesh under Yogi Adityanath' என்ற தலைப்பில் யோகி அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான முழுப்பக்க விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கொல்கத்தா மேம்பாலம்
ஏனென்றால் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள மேம்பாலம் இருப்பது மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்..! மேலும், அதில் மேற்கு வங்கத்தில் இருக்கும் மஞ்சள் டாக்ஸிகள் செல்வதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த மேம்பாலம் மத்திய கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் அரசால் கட்டப்பட்ட 'மா மேம்பாலம்' என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மேம்பாலத்தின் அருகே உள்ள கட்டிடங்களும் கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புகைப்படங்கள் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதுதான் அவர்கள் சொல்லும் மாற்றம்
இதனை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கிண்டல் செய்யும் வகையில் ட்வீட் செய்து வருகின்றனர். மம்தாவின் உறவினரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி தனது ட்விட்டரில், "யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை உ.பி.யை மாற்றுவது என்றால் மம்தா அரசு வங்கத்தில் கட்டிய பாலங்களின் படங்களைத் திருடி தனது சாதனையாக கூறி கொள்வது போல! பாஜகவின் வலிமையான மாநிலத்திலேயே அவர்கள் கூறும்'இரட்டை என்ஜின் மாடல்' முற்றிலும் தோல்வியடைந்ததையே இது வெளிப்படையாக காட்டுகிறது!" என விமர்சித்துள்ளார்.

விளக்கம்
நெட்டிசன்கள் பலரும் இதை கலாய்த்து வருகின்றனர். யோகி அரசு கஷ்டப்பட்டு கொல்கத்தாவில் புதிய பாலத்தை கட்டியுள்ளதாகக் கிண்டல் செய்து ட்வீட் செய்து வருகின்றனர், அதேநேரம் இந்த விளம்பரம் செய்தித்தாள் சார்பில் தயார் செய்யப்பட்டது என்றும் எதிர்பாராத விதமாக இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் சம்ந்தப்ட்ட செய்தித்தாள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த விளம்பரம் அனைத்து டிஜிட்டல் தளங்களில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

உபி சட்டசபைத் தேர்தல்
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் யோகி ஆதித்யநாத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2017 உபி முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் மீது கடந்த ஆண்டு வரை பெரியளவில் எதிர்ப்புகள் இல்லாமலேயே இருந்தது. ஆனால், இந்த ஆண்டு கொரோனா 2ஆம் அலையைக் கையாண்டதில் அம்மாநில அரசு முற்றிலுமாக தோல்வியடைந்தது. கங்கை நதியில் கொரோனா சடலங்கள் மிதந்து சென்ற காட்சிகளும் வெளியானது. இது யோகி அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மட்டுமே பாஜகவை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் அது யோகி ஆதித்யநாத்தின் அரசியல் எதிர்காலத்தின் முடிவுரையாகவே இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications