உத்தரப் பிரதேச பால்வளத்துறையில் தலைகீழ் மாற்றம்.. ரூ.31 கோடி நிதி ஒதுக்கினார் யோகி ஆதித்யநாத்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பால்வளத்துறையை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு ரூ.31 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இதன் மூலம் அடுத்த 5 மாதங்களில் பால்வளத்துறை புதிய மாற்றத்தை பெறும் என ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாநிலத்தின் பால்வளத்துறையை மேம்படுத்த ரூ.31 கோடியை ஒதுக்கி இருக்கிறது. ஏற்கெனவே கால்நடை இனங்களை மேம்படுத்துதல், பால் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் உள்நாட்டு மாட்டு இனங்களின் மக்கள்தொகையை அதிகரிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பணியை மாநில அரசு ஏற்கெனவே செய்து வருகிறது. இப்படி இருக்கையில், நந்த் பாபா பால் இயக்கத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களுக்கான விரிவான செயல் திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.
இதன்படி முதலமைச்சர் சுதேசி பசு ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் முதலமைச்சர் முற்போக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம் ஆகிய இரண்டிற்கும் கணிசமாக ரூபாய் 10 கோடியும், நந்தினி கிரிஷக் சம்ரிதி யோஜனாவிற்கு 11 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, யோகி அரசாங்கம் 2,500 உள்நாட்டு பசு மையங்களை நிறுவவும், கால்நடை துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு 8,000 விருதுகளை விநியோகிக்கவும், 35 பால் பண்ணைகளை அமைக்கவும் உத்தேசித்துள்ளது.
இந்த திட்டம் முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் பரிட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படும். இதனையடுத்து இது மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். எது எப்படியாயினும் இந்த திட்டம் பால்வளத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications