வறட்சியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: பருவமழை தவறியதால் உத்தரப் பிரதேசத்தில் சில மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. மழையை நம்பி நடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி மாட்டு தீவனத்திற்கு கூட பயன்படாத நிலையில் இருக்கிறது. இதனை சமாளிக்க வறட்சிக்கான நிவாரணத்தை உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நிவாரணம் பெறும் தேதி நீடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வறட்சியாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். நெருக்கடியின் போது மாநில அரசு அவர்களுடன் நிற்கும். விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதற்காக திட்டத்தின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மழை குறைவாக உள்ள 14 மாவட்டங்களில் மினி விதைப் பெட்டிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மினி கிட்களுடன், 5,800 குவிண்டால் விதைகளை வழங்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எனவே வறட்சி குறித்து விவசாயிகள் எந்த கவலையும் அடைய தேவையில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் ஏராளமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே பாஜக விவசாயிகளை காப்பாற்றும்.
கடந்த கால ஆட்சியில் எதுவும் உருப்படியாக செய்யவில்லை. எல்லா வளங்களும் வீணாக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அப்படியல்ல. நாங்கள் வேளாணை வளர்த்தெடுக்க திட்டமிடலுடன் பயணித்து வருகிறோம்" என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications