உ.பியில் பாஜக ஆட்சியில் சிறு குறு வியாபாரிகள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: சாலையோர வியாபாரிகள் போன்ற சிறு குறு தொழில் செய்பவர்கள் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவி வகிக்கவில்லை. அந்த வகையில் 2017ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவே இதனை கொண்டாடும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இதில் பிரதமர் ஸ்வாநிதி திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டத்தின்கீழ் சிறுகுறு தொழில்களை செய்வோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தால் தெரு வியாபாரிகள் இனி வட்டிக்கு கடன் கொடுப்பவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை. தற்போது வரை 15 லட்சம் தெருவோர வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ரூ.10,000 முதல் கட்டமாகவும், ரூ.20,000 மற்றும் ரூ.30,000 என மூன்று கட்டங்களாக வழங்கப்படும்.
இதுபோன்ற ஏராளமான திட்டங்கள் உத்தரப் பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஏழை பெண் குழந்தைகள் பிறந்தது முதல் கல்வியை முடிக்கும் வரை அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படியான திட்டங்கள் மூலம் நமது மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. 2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் கலவரங்களும், வன்முறைகளும் அதிகமாக இருந்தன. ஆனால் பாஜக பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன.
குறிப்பாக பெண்கள் மீதான குற்றங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 முக்கிய துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications