வேற லெவலில் மாறும் அயோத்தி! தேதி குறித்த உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.. கெத்து காட்டும் பாஜக
லக்னோ: இந்த ஆண்டு இறுதியில் அயோத்தியில் பல்வேறு கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிடும். இதன் மூலம் அயோத்தி உலகின் மிகவும் அழகான நகரங்களில் முதன்மையான நகரமாக உருவெடுக்கும்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடங்கியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே.4) நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே.11ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி நகரம் விரைவில் மிகவும் அழகான நகரமாக பரிணமிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, "அயோத்தி ராமஜென்ம பூமியின் பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்துவிடும். அப்போது இந்த நகரம் வேற லெவலில் மாறிவிடும். ஒரு காலத்தில் அயோத்தி குறித்து பேசவே பயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது அயோத்திக்கு லட்சக்கணக்கானவர்கள் படையெடுத்து வர தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் இரட்டை என்ஜின் அரசுதான். அயோத்திக்காக ரத்தம் சிந்திய ராமரின் பெருமையை சிலர் கொச்சைப்படுத்த முயன்றனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது என்று அனைவரும் அறிவர். சமாஜ்வாடி கட்சியின் அயோத்தி குறித்து சிந்திப்பதையே ஏறத்தாழ நிறுத்திவிட்டனர். அவர்கள் அயோத்தியை குற்றவாளிகளின் பூமியாக மாற்ற முயன்றனர். ஆனால் மத்திய அரசு சார்பில் அதாவது பிரதமர் மோடி சார்பில் அயோத்தி குறித்து வலுவாக குரல் கொடுக்கப்பட்டது. இப்படியாகதான் அயோத்தி மீட்கப்பட்டது. தற்போது அயோத்தி ராம ராஜ்ஜியத்தின் புனித பூமியாக மாற்றப்பட்டிருக்கிறது.
ராமஜென்ம பூமியில் இந்த ஆண்டு இறுதிக்குள் ராமர் கோயில் பணிகள் நிறைவடைந்துவிடும். ஏற்கெனவே அயோத்தி நகரில் இறைச்சி விற்பனை கூடத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது இந்த நகரின் சாலைகள், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் என உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல அயோத்தி நகரம் முழுக்க முழுக்க சூரிய ஒளி ஆற்றலை கொண்டு இயங்கும் நகரமாக கட்டமைக்கப்பட இருக்கிறது.
பள்ளி கல்லூரிகள், திறந்தவெளி இடங்கள், பல்கலைக்கழகங்கள், சரயூ நதிக்கரை ஓரம் என வாய்ப்பிருக்கும் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் தகடுகள் பொருத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்க உள்ள முதல் நகரம் எனும் பெயரை அயோத்தி பெற இருக்கிறது. ஆனால் சமாஜ்வாடி கட்சியானது இதுவரை மக்களுக்கு என எதையும் செய்யவில்லை. விமர்சனங்களை மட்டும் கலர்கலராக வைப்பார்கள். எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், அயோத்தியின் மேயராக பாஜகவின் மஹந்த் கிரீஷ்பதி திரிபாதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications