நோ வைலன்ஸ்.. வேலை வாய்ப்புக்கு அதீத முக்கியத்துவம்! 6 ஆண்டு ஆட்சி குறித்து யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக தான் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இந்த 6 ஆண்டுகளில் வன்முறைகள் குறைக்கப்பட்டு வேலைவாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் யோகி ஆதியநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதத்தில் உத்தரப் பிரதேசமும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது தொடர்பாக யோகி ஆதித்யநாத் கூறுகையில் அடுத்த 4 ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேசத்தின் நிலைமை 6 ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் மோசமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் கலவரமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மாநிலத்தின் நிலைமை மாறியுள்ளது.

இந்த 6 ஆண்டுகளில் இதுவரை ஒரு இடத்தில் கூட கலவரங்கள் ஏற்படவில்லை. மறுபுறம் மாநிலம் சீரான வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்த வளர்ச்சிக்கு இருந்த தடைகள் பாஜக ஆட்சியில் உடைக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் அனைவருக்கும் ஒரே இலக்குதான் இருக்கிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்கிற அளவில் உயர்த்துவதுதான் அந்த இலக்கு. இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடர்ச்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதற்கான நோக்கமும் இதுதான்.
இந்த மாநாட்டின் மூலம் சுமார் 35 லட்சம் கோடி ரூபாய் உத்தரப் பிரதேசத்திற்கு வர இருக்கிறது. இது மாநிலத்தில் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும். சரியாக சொல்வதெனில் இன்றைய தேதியிலிருந்து 3-4 வருடங்களில் நமது மாநிலத்தை சேர்ந்த 2 கோடி இளைஞர்களுக்கு இந்த முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும். எனவே வேலை தேடி நமது இளைஞர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அவசியமில்லை. உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகள் உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் வருவாயும் அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும்.
பொருளாதார வளர்ச்சியுடன் சேர்த்து 10 துறைகளை இந்த அரசு கவனத்தில் கொண்டு கூடுதல் நிதிகளை ஒதுக்கி வருகிறது. கல்வி, உட்கட்டமைப்பு, சுகாதாரம், தொலை தொடர்பு, இன்டெர்நெட் போன்ற துறைகளில் அதிக அளவில் அரசு முதலீடு செய்திருக்கிறது. எனவே நாம்தான் இந்தியாவுக்கே வழிக்காட்டி மாநிலமாக இருக்க போகிறோம். நமது பாணியைதான் இனி அனைத்து மாநிலங்களும் பின்பற்றபோகிறது. அதே நேரத்தில் நமது பாராம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நம்முடைய தலைமுறைகளுக்கு கடத்த வேண்டும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications