உ.பி.யின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் அங்கீகரித்துள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கியும், நிதி ஆயோக்கும் அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. ஆனால் இந்த 6 ஆண்டுகளில் இந்த மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சுற்றுலாத்துறை, தொழில்துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் விளைவாக, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.

நாட்டிலேயே மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலமாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வளர்ச்சியடையாத மாநிலமாக கருதப்பட்டது. யாரும் உ.பி.க்கு வர விரும்பவில்லை. உ.பி.யின் பெயரைக் கேட்டாலே மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது, ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. சமீபத்திய ரிசர்வ் வங்கி மற்றும் NITI ஆயோக் அறிக்கைகள், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் மாற்றத்தை அங்கீகரித்துள்ளன.
உ.பி.யில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கேட்பவர்களின் கண்களை திறந்து இந்த அறிக்கையை படிக்க வேண்டும். நாட்டிலேயே பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் முதல் மாநிலம் உ.பி. தான் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உத்தரபிரதேசம் ஒரு பெரிய முதலீட்டு மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது, தொழில்முனைவோருக்கான வங்கிச் சேவைகளில் சிறந்து விளங்குகிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
உ.பி.யில் உள்ள வட இந்தியாவின் முதல் டேட்டா சென்டர் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக உள்ளது, அதே சமயம் உ.பி.யின் ஃபிலிம் சிட்டி மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் உ.பியின் தொழில் முனைவோர் மாநாட்டை டெல்லியிலும், மும்பையிலும் நடத்தினர். ஏனெனில் உ.பி அப்போது வளர்ச்சியடையாத மாநிலமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாங்கள் இந்த மாநாட்டை லக்னோவில் நடத்தி அசத்தினோம். இன்று உத்தரப் பிரதேசம் வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் புதிய அடையாளமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications