உச்சம் தொட்ட கல்வி வளர்ச்சி.. பாஜக ஆட்சியில் மேலும் ஓர் மைல் கல்! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கல்வி முறை மேம்பட்டிருப்பதாகவும், பல பள்ளிகள் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு புதிய திட்டங்களை யோகி ஆதித்யநாத் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில், பள்ளிகளுக்கு எல்இடி டிவி மற்றும் கற்றல் கருவிகள் வழங்கும் 'சம்பார்க் ஸ்மார்ட்ஷாலா-ஸ்மார்ட் பிளாக்' திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதில் உரையாற்றிய அவர், "கடந்த 6 ஆண்டுகளில் அடிப்படைக் கல்வியில் மாநிலம் பெரிய பாய்ச்சலை எட்டியுள்ளது. மூடப்படும் தருவாயில் உள்ள பல பாடசாலைகள் இந்தக் காலப்பகுதியில் புத்துயிர் பெற்றுள்ளன.

அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் கற்பித்தல் தரம் ஆகியவற்றில் கணிசமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னர், அதாவது 2017ம் ஆண்டுக்கு முன்பு, இந்த பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருந்தன. ஆனால் பாஜகதான் கல்வியில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டத்தின் முதல் கட்டமாக 58 உயர்நிலை பள்ளிகளில் கணிதம் மற்றும் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான LED டிவிகள் மற்றும் கற்றல் கருவிகள் பொருத்தப்படும். ஆளுமை வளர்ச்சிக்கு கல்வியே முக்கியம். மாநிலத்தில் உள்ள 2.56 லட்சம் அரசு தொடக்க மற்றும் ஜூனியர் உயர்நிலைப் பள்ளிகளில் 1.34 கோடி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த காலங்களை விட அதிகமாகும். 2017க்கு முன்பு ஆசிரியர் பற்றாக்குறை இருந்ததன் காரணமாக மாணவர்களின் சேர்க்கையும் குறைந்தது.
தற்போது 1.65 லட்சம் ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் கல்வி தடைப்பட்டாலும், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா, கல்வியை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications