மூன்று மடங்கு அதிகரித்த ஏற்றுமதி.. புதிய இந்தியாவின் புதிய உ.பி! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், வளர்ச்சி பாதையில் மாநிலம் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் உத்தரப் பிரதேசம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் என்றாலே வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் மாநிலங்கள் எனவும், தொழில் செய்வதற்கான ஏற்ற இடங்கள் இல்லாத மாநிலங்கள் எனவும் கருதப்பட்டன.

ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. உள்ளூர் மக்களுக்கான குரல்" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாக கொண்டு நாங்கள் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு எனும் திட்டத்தை கொண்டு வந்தோம். இது எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது.
இப்படியாக கடந்த ஆறு ஆண்டுகளில், தொழில்மயமாக்கலுக்கு ஏற்ற சூழலை மாநிலம் வளர்த்துள்ளது. இதன் விளைவு உத்தரப் பிரதேசம் தற்போது வருவாய் உபரி மாநிலமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல மாநிலத்தில் ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்து ரூ.1.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசம்.
கடந்த பிப்ரவரி மாதம் நாம் வரலாற்று சிறப்புமிக்க உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தினோம். அதுவும் லக்னோவில் நடத்தினோம். இதற்கு முந்தைய அரசுகள் உ.பிக்கான மாநாட்டை டெல்லியில் நடத்தின. ஆனால் நாங்கள் உ.பி தலைநகர் லக்னோவில் நடத்தினோம். ஏனெனில் நாங்கள் உத்தரப் பிரதேசத்தை உலக தரத்திற்கு மாற்ற விரும்புகிறோம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications