டபுள் இன்ஜின் அரசு: லேண்ட் மாஃபியாக்கள் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளனர்.. உ.பி. முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: நிலத்தை ஆக்கிரமித்து மக்களிடமிருந்து பிடுங்கும் மாஃபியாக்களை உத்தரப் பிரதேச அரசு சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளது என்றும், இதன் மூலம் நில ஆக்கிரமிப்புகள் குறைந்திருக்கிறது எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "மாநிலத்தின் வளர்ச்சியானது 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிது. இதில் குறுக்கிடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசும், காவல்துறையினரும் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். நில தகராறு புகார்களில் இரு தரப்பிலும் குற்றச்சாட்டு இருப்பின் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இதே ஆக்கிரமிப்பு புகார் இருந்தால் உறுதியான, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் மாதம் தோறும் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தி மக்களை சந்திக்கிறேன். அதில் மருத்துவ உதவிக்காக சில பெண்கள் வந்திருந்தனர். இதுபோன்று மருத்துவ உதவி வேண்டி வருபவர்களுக்கு தேவைப்படும் நிதி உடனடியாக ஒதுக்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரமான சிகிச்சையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்று கூறினார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்திற்காக பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை அமைப்பதை அரசு இலக்காக கொண்டிருப்பதாக அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியுள்ளார்.
மேலும் விவசாயிகளின் வாழ்க்கையில் டபுள் இன்ஜின் பாஜக அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதே இதற்கான சான்று என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications