யோகி கொடுத்த 100 நாள் ”டார்கெட்”.. நாளைக்குள் செய்ய உத்தரப்பிரதேச அமைச்சர்களுக்கு கட்டளை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 2வது முறையாக பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் நிறைவடைய இருக்கும் நிலையில் அமைச்சர்களுக்கு கொடுத்த இலக்கை செய்து முடிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு இருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றது.
குறிப்பாக இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 2 வது முறையாக பாஜக வென்று, யோகி ஆதித்யநாத் 2 வது முறை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
யோகி பக்கத்தில் சீட்! பணிவுத்திலகமாக ஓ.பன்னீர்செல்வம்! தம்பிதுரை மூலம் கெத்து காட்டிய எடப்பாடி!
யோகி 2.0. பதவியேற்பு
உத்தரப்பிரதேசத்தில் முதல்முறையாக தொடர்ந்து 2 தேர்தல்களில் பாஜக வென்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் பாஜக அரசின் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
யோகி கொடுத்த டார்கெட்
யோகி 2.O என்று பாஜகவினரால் கூறப்படும் இந்த ஆட்சியில், முதலமைச்சராக பதவியேற்றவுடனே அனைத்து துறைகளுக்குமான செயல் திட்டங்களை அறிவித்து இலக்குகளை தீர்மானித்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்கள் இலக்கு, 6 மாத இலக்கு, 5 ஆண்டு இலக்கு என அமைச்சர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு இலக்குகளை நிர்ணயம் செய்தது.
அமைதியிழந்த உபி
ஆனால், பாஜக 2 வது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அங்கு சாதிய மதவாத வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் மேலும் தலைதூக்கி இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக கியான்வாபி மசூதி சர்ச்சையால் ஏற்பட்ட போராட்டங்கள், நபிகள் நாயகம் குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் அவதூறை கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறைகள் அதனை தொடர்ந்து புல்டோசரில் வீடுகள் இடிக்கப்பட்டது, அக்னிபாத் வன்முறைகள் என உத்தரப்பிரதேசத்தில் நிலவும் அமைதியின்மையை காட்டுகின்றன.
100 நாட்களை நெருங்கும் யோகி அரசு
இந்த நிலையில், வரும் ஜூலை 5 ஆம் தேதியுடன் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு உத்தரப்பிரதேசத்தில் 2 வது முறையாக ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவடைய உள்ளன. இதனை முன்னிட்டு நேற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல் நூறு நாட்களில் நிறைவேற்ற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட திட்டங்களை ஜூன் 30 (நாளைக்குள்) முடிக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.