வெறும் வாக்குகளுக்காக அல்ல.. அரசு திட்டங்கள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்
லக்னோ: அரசு அறிவிக்கும் திட்டங்கள் வாக்குகளுக்காக அல்ல என்றும், சமூகத்தின் தன்னம்பிக்கையை வளர்க்கவே எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னோவில் தங்கும் விடுதியின் கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "அரசின் நல திட்டங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மக்களுக்காக என்ன செய்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்படுகிறது என்பது குறித்தும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதுதான் பாஜகவின் இலக்கு என்று கூறியுள்ள அவர் அதற்கு இடையூராக உள்ளவற்தை தகர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சுட்டிக்காட்டிய யோகி ஆதித்யநாத், "இந்த மாநாடு நடத்தியதற்கு காரணம் முதலீடுகள் அதிக அளவில் குவிய வேண்டும் என்பதற்காகதான். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகள் குறித்து நமக்கு நன்றாக தெரியும்.
அந்த மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தை பற்றியதாக இருந்தாலும் அவை உத்தரப் பிரதேசத்திற்கு வெளியில்தான் நடைபெற்றன. ஆனால் முதல் முறையாக பாஜக அரசு இந்த மாநாட்டை உத்தரப் பிரதேசத்தில் நடத்தி காட்டியிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகள் வர இருக்கின்றன. இவ்வளவு முதலீட்டில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தற்போது பாஜக அரசு இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வருகிறது. இதற்காக மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு என 10 முக்கிய துறைகள் தலைகீழ் மாற்றம் பெற இருக்கிறது. தொடக்க கல்விக்காக மட்டும் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட இருக்கிறது.
இதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதேபோல நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுவரை இம்மாநிலத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. அதேபால குற்றங்கள்/குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
வளர்ச்சிக்கான திட்டங்கள் ஒருபுறம் எனில் மறுபுறம் சமூக வளர்ச்சிக்கான திட்டங்களும் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளன. கன்யா சுமங்கலா யோஜனா எனும் திட்டம் பெண் சிசு கொலையை தடுக்க அறிவிக்கப்பட்ட திட்டமாகும். மிஷன் இந்திரதனுஷ் திட்டம் பெண் குழந்தைகளை சுகாதாரமாக பராமரிப்பதை பற்றியது, இப்படி பெண்களின் வாழ்வாதாரத்தை மாற்ற ஏராளமான திட்டங்களை பாஜக அரசு அறிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications