உத்தரப் பிரதேசத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது..யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு மாநில அரசு உரிய தீர்வை கொடுத்து வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகமடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாநிலத்தில் ஏராளமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத், மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதேபோல மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் பொதுப் பிரச்னைகளை தீவிரத்துடனும், உணர்திறனுடனும், கவனத்துடனும் கேட்கவும், திருப்திகரமான தீர்வுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று கோரக்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் வைத்து மக்கள் குறை தீர்வு கூட்டத்தை நடத்தினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இதனையடுத்துதான் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். அதேபோல தனக்கு வந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதிகாரிகளை பொறுத்த அளவில், அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications