6 ஆண்டுகளில் வளர்ச்சி.. பொருளாதார முன்னேற்றத்தில் தீவிரம் காட்டும் உ.பி! சாதனைகளை பட்டியலிட்ட யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கி இருந்ததாகவும், தற்போது வருவாய் உபரி மாநிலம் எனும் அளவுக்கு வளர்ந்திருப்பதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். டெல்லியில் தற்போது 42வது இந்திய-சர்வதேச வர்த்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உத்தரப் பிரதேசம் சார்பாக சில அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்பட்டிருக்கின்றன.

உத்தரப் பிரதேசத்தின் தனித்த அடையாளத்தை பலப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் யோகி ஆதித்யநாத் இந்த திட்டத்தை தொடங்கினார். இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தின் அடையாளமாக இருக்கும் கைவினை பொருட்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் குறிப்பிட்ட அளவு வருவாய் இந்த கைவினை பொருட்களிலிருந்து கிடைத்ததாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்நிலையில் உ.பி அரங்குகளை பார்வையிட்டு பேசிய அவர், "கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. அதற்கு முன்னர் இந்த மாநிலத்திலிருந்து ஏராளமான மக்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக மற்ற மாநிலங்களுக்கு சென்றனர். தற்போது வேலை வாய்ப்புகள் இங்கு புதியதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வறுமை எனும் நிலையிலிருந்து வளர்ந்த நிலைக்க இந்த மாநிலம் முன்னேறியிருக்கிறது. இதற்கு பாஜக அரசுதான் காரணம்.
மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பெண்களுக்கான பாதுகாப்பு, கல்வி, சமூக மேம்பாடு என பாஜக அரசாங்கம் இரட்டை தளத்தில் செயல்பட்டு அதில் வெற்றி கண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications