இரட்டிப்பாக்குவதே இலக்கு.. வனத்தின் பரப்பளவில் கவனம் செலுத்தும் உபி அரசு.. சூழலியலை மாற்ற யோகி அதிரடி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் 1 டிரில்லியன் பொருளாதாரத் நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறி வரும் நிலையில், மாநிலத்தின் பறவை மற்றும் விலங்குகளை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்திட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.35 லட்சம் கோடி வரை மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிய தொழிற்சாலைகள் வர இருப்பதால் மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அதற்கேற்ப மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு என குறிப்பிட்ட 10 துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க துறைதான் வனத்துறை. அதிகரிக்கும் தொழிற்சாலைகள், மக்கள் பெருக்கம் ஆகியவை காடுகளின் பரப்பளவை வேகமாக குறைத்து வருகிறது. எனவே பல உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளன. எனவே இவற்றை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தவிட்டுள்ளார்.
இதில் மாநில பறவையான சரஸ் கொக்கு மற்றும் மாநில விலங்கான சதுப்பு நில மான்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று யோகி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "சரஸ் கொக்கு மற்றும் சதுப்பு நில மான்கள் வாழும் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அப்பகுதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படக்கூடாது. எனவே வனம், வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் இணைந்து ஒரு சிறப்பு திட்டம் தயாரிக்க வேண்டும்.
இந்த திட்டம் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தின் காடுகளின் பரப்பளவு கடந்த காலத்தை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கங்கை சமவெளி நிலப்பரப்பில் புலிகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. மற்றொருபும் நாமி கங்கை திட்டத்தின் அடிப்படையில் கங்கை நதி தூய்மையடைந்து வருகிறது. நதியில் டால்பின்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே சதுப்பு நிலங்களை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல பலன் அளித்திருக்கிறது.

இது போன்று இயற்கையின் வளங்களை அதிகரிக்க புதிய செயல் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும். இந்த திட்டங்களை அமல்படுத்தும்போது அது சார்ந்து இருக்கும் கிராமங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். இது மாநிலத்தின் ஒட்டு மொத்த வருவாயை அதிகரிக்கும். எனவே இது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications