மதுரையில் குக்கர் குவியல்.. ரெய்டு நடத்தி அள்ளிய பறக்கும் படை!
மதுரை: மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பறக்கும் படையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ரொக்கமாக பணம் கொண்டு சென்றால் அதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து மதுரை முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதி பின்பற்றப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தெரிவித்திருந்தார. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் தலைமையில் 70 பேர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மதுரை காதக்கிணறில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது சென்னையில் இருந்து மதுரைக்கு உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 6 லட்சம் மதிப்பிலான 500 எலக்ட்ரிக் குக்கரை வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500 குக்கரை வாகத்துடன் ஒப்படைத்தனர்.