“நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக வாழனுமா?” பட்டியலின மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்! மதுரையில் ஷாக்
மதுரை: மேலூர் பகுதியில் பட்டியலின மருத்துவ பணியாளர் மற்றும் அவர் கணவர் மீது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க? என்று பொதுவெளிகளில் அதிகம் கேள்விகள் எழுப்பப்படுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இன்னமும் சாதிய வன்கொடுமைகள் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் நிலையில், தென் மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, மதுரை மாவட்டம் மேலூரில் சேக்கிபட்டி- உடப்பம்பட்டியில் பட்டியல் மருத்துவ பணியாளர் மற்றும் அவரின் கணவர் மீது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை- மேலூர்- சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தற்காலிக சுகாதார பெண் தன்னார்வலராக பணியாற்றி வரும் தனலெட்சுமி மற்றும் அவர் கணவர் மீது கடுமையான வன்கொடுமை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
தனலெட்சுமி ( எ) பிரேமா நர்சிங் பட்டயப் படிப்பு முடித்தவர் ஆவார். அவரது கணவர் செந்தில் பெயிண்டர் ஆக தொழில் செய்து வருகிறார். தனலெட்சுமி ஜனவரி 4ம் தேதியன்று உடப்பம்பட்டி அங்கன்வாடி மையம் அருகே அமர்ந்து மக்களுக்கு மாத்திரைகளை கொடுத்துக் கொண்டிருந்தார். உடன் அவரது கணவரும் உதவிக்காக வந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நல்லு மகன் அழகன் (எ) குமார் என்பவர் தனலெட்சுமியிடம் தகாத முறையில் தகராறு செய்துள்ளார். சாதியைக் குறிப்பிட்டு இழிவாக பேசியுள்ளார். "நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக உசுரு வாழனுமா? மாத்திர கொடுக்காம நிறுத்துடி" என்று பேசி மாத்திரைகளை சிதறவிட்டு பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.
என் வேலையை தடுக்காதீர்கள் என்று தனலெட்சுமி சொன்னதற்கு அவரின் சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து கட்டையை எடுத்து தோள்பட்டை, தலையில் அழகன் அடித்திருக்கிறார். தனலெட்சுமி பலத்த ரத்தகாயம் அடைந்துள்ளார். அவர் தாக்கப்படுவதை தடுக்க வந்த கணவர் செந்திலை தலையில் அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். அங்கிருந்த மற்றவர்களும் இத்தாக்குதலை தடுக்கவில்லை.

பலத்த காயத்திற்கு ஆளான இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக் கொடூரமான வன்கொடுமைத் தாக்குதலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கிறது.
இது போன்ற கடுமையான சாதி வெறிக் தாக்குதல்கள் மீதான விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான நிவாரணம் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications