வங்கியில் திருடுவது எப்படி? யூடியூப்பில் பார்த்த உசிலம்பட்டி இளைஞர்.. இருட்டில் நடந்த முரட்டு சம்பவம்
மதுரை: வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்ட எம்பிஏ பட்டதாரி இளைஞர், முதலில் ஆன்லைனில் சூதாடி ஐந்து லட்சத்தை இழந்தார்.. அடுத்ததாக இழந்த பணத்தை சம்பாதிக்க கொள்ளையடிக்க முடிவு செய்தார். அதற்காக யூடியூப்பில் வங்கியில் திருடுவது எப்படி? என்று பார்த்துவிட்டு சென்றவர்.. இப்போது கம்பி எண்ணுகிறார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவருடைய மகன் லெனின். இவருக்கு 30 வயது ஆகிறது. இவர் எம்.பி.ஏ. முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். ஆனால் அங்கு குறைந்த சம்பளம் கிடைத்ததாக கூறி வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துவிட்டாராம்.

ஊருக்கு வந்த லெனின் விரைவாக சம்பாதிக்க விரும்பினாராம். அதற்காக ஆன்லைனில் சூதாடினால் உடனே கோடிகளில் சம்பாதிக்கலாம் என்று நினைத்துக்கொண்ட அவர், ஆன்லைன் மூலம் சூதாட தொடங்கினாராம். அதில் சுமார் ரூ.5 லட்சம் வரை இழந்துவிட்டாராம். இதனால் விரக்தி அடைந்த லெனின், இழந்த பணத்தை சம்பாதிப்பது எப்படி? என பல வழிகளை தேடியிருக்கிறார்.
அப்போது விபரீதமான சிந்தனை அவருக்கு வந்தள்ளது. அதன்படி யூ-டியூபில் வங்கியில் திருடுவது எப்படி? அதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்னென்ன? என்பது சம்பந்தமான வீடியோக்களை பார்த்து உள்ளாராம். பின்னர் திருடுவதற்கான உபகரணங்களை ஆன்லைன் மூலம் வாங்கியிருக்கிறார்.
பின்னர் உசிலம்பட்டியில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்களை நோட்டமிட்டுள்ளார். அதன்படி அங்குள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிப்பது என முடிவு செய்திருக்கிறார். சம்பவத்தன்று நள்ளிரவு அந்த நிதிநிறுவன பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த உசிலம்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி, போலீஸ்காரர் அன்புகுமார் ஆகியோர் அந்த வழியாக சென்றனர். அவர்களை பார்த்ததும், அங்கிருந்து லெனின் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள், நிதி நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு இருந்த பூட்டை உடைக்க முயன்றதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து நிதிநிறுவன வாசலில் இருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது, அதில் பூட்டை உடைக்க பயன்படும் உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து அங்கிருந்து தப்பியவரை போலீசார் தேட தொடங்கினார்கள்.
இதனிடையே இருட்டில் பதுங்கி இருந்த லெனினை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்க நிதிநிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்றதை லெனின் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications