நல்ல மழை பெய்து நாடெல்லாம் செழிக்க.. மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம்
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா வரும் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தினசரியும் ஆடி வீதியில் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வருவார். விழாவில் 3ஆம் நாளான 22ஆம் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடைபெறும்.
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். 'ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி' என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சித்திரையில் தொடங்கி ஆவணி வரை மீனாட்சி அம்மன் ஆட்சிதான் மதுரையில் நடைபெறும்.
வைகாசியில் வசந்த உற்சவம், ஆனி ஊஞ்சல் திருவிழா என வரிசையாக நடைபெறும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு முளைக்கொட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெறும். ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாவாகும்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர் விளைச்சல் அதிகரிக்க வேண்டியும் இறைவனை வழிபாடு செய்வது வழக்கம். நல்ல மழை பெய்து நாடெல்லாம் செழிக்க வேண்டி மதுரையில் முளைக்கொட்டு உற்சவம் நடைபெறும்.

மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் ஆடி வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
விழாவில் 3ஆம் நாளான 22ஆம் தேதி ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், 7ஆம் நாளான 26ஆம் தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications