ஆவினுக்கும் தனியார் கம்பெனிக்கும் ‘டை அப்’.. கொள்ளை அடிக்கிறார்கள்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
மதுரை: தனியார் பால் கம்பெனிக்கும் ஆவினுக்கும் டை அப் உள்ளது, மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேசுகையில், "திமுக ஆட்சியில் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தற்போது ஆவின் பாலில் கொழுப்பு சத்துகளை குறைத்துள்ளனர். இதனால் ரூ.8 முதல் ரூ.10 வரை மக்களிடம் இருந்து ஆவின் நிர்வாகம் கொள்ளையடிக்கிறது.

தனியார் பால் கம்பெனிக்கும் ஆவினுக்கும் டை அப் உள்ளது. மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. அமைச்சர் என்பதால் நான் மரியாதை தருகிறேன். மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ஆவின் அதல பாதாளத்தில் உள்ளது.
நாங்கள் கொடுத்த ரிப்போர்ட் பொய் என்றால், பாஜகவில் இருந்து 5 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறேன். ஆவின் நிறுவனத்திற்குள் அவர்களை அனுப்பத் தயாரா? எல்லாவற்றையும் நான் படம் பிடித்துக் காட்டுகிறேன். ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்யும்போது ஏதேனும் குறைகள் இருந்தால் பாலை நிராகரித்து விடுகின்றனர். ஆவின் பாலில் கொழுப்பு சத்துக்களை குறைக்கவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் பொய்யை பரப்பி வருகிறார். தனியார் பால் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
ஆவினில் 1 சதவீதம் கொழுப்பு குறைத்தால் ரூ.8 வரை லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது 1.3 சதவீதம் வரை கொழுப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் லாபத்தை கொள்ளையடிக்கின்றனர். இந்தியா முழுவதும் அமுல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் 65 சதவீத லாபம் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் விவகாரம் பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரை விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதற்கு எதிர்வினையாக, தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்டு 48 மணி நேரம் கெடு விதித்தார் அண்ணாமலை. உங்களால் நிரூபிக்க முடியவில்லையெனில், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினார் அண்ணாமலை.
அதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், "மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன, தலையை சீவி விடுவாயா? 48 மணி நேரம்.. மிரட்டலா? எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல" என்றார். இதையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை, "ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய உங்கள் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications