அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திர பதிவு செய்யும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்-மதுரை கோர்ட்
மதுரை: தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, ''அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து அவரை பணிநீக்கம் செய்வதோடு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன்.
இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அங்கீகரிக்கப்படாத மனைகளை
அதில், ''வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசிடம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக வீட்டு மனை விற்பனை நடைபெற்று வருகிறது என்றும் அரசிடம் உரிய அனுமதி பெறாமலும் அங்கீகரிக்கப்படாமலும் உள்ள மனைகள் பத்திரப்பதிவு செய்யபடுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டமே உள்ள நிலையில், இதுபோன்று விற்பனை நடைபெற்று வருகிறது. சட்ட விதிகள் எதையும் முறையாக கடைபிடிக்காமல் தேனி சார் பதிவாளர் ஆபிசில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்
எனவே முறைகேடாக நடைபெற்ற இந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், ஜெ.சத்தியநாரயண பிரசாத் ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீது இன்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

பணிநீக்கம் செய்வதோடு..
''முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இருந்தாலும் இதுவரை கைது செய்யவில்லை. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. பேரூராட்சியால் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் யார்? என்பதை கண்டறிந்து அவரை பணிநீக்கம் செய்வதோடு வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

சமர்பிக்க வேண்டும்
அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திரப்பதிவு தொடர்பான அனைத்து தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்படாத மனைகளின் பத்திர பதிவு தொடரும் பட்சத்தில் துறை செயலாளார்கள் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும். சார் பதிவாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 22 ஆம் தேதி அறிக்கையாக பதிவுத்துறை தலைவர் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications