"அரசியலை தாண்டி எல்லோரையும் மதிக்க வேண்டும்".. விஜய் மாநாட்டு பேச்சு குறித்து நடிகர் சூரி கருத்து!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தது பற்றிய கேள்விக்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.
நடிகர் சூரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். சூரி, மதுரை ராசாக்கூர் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றார். அங்கு சூரி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அப்போது ஏராளமான ரசிகர்கள் சூரியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூரி, "எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள். ராமன் லட்சுமணன் போல நானும் என் தம்பியும் இரட்டைப் பிறவிகள். ராமன் என்ற பெயர் சூரியாக மாறி உள்ளது. நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு, எனது ரசிகர்கள் மற்றும் உறவினர்கள்தான் முழு காரணம்" என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிள் ஸ்டாலின் எனக் குறிப்பிட்டு விமர்சனம் செய்தது பற்றி சூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சூரி, "இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும், எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலைத் தாண்டி, எல்லாரும் எல்லாரையும் மதிக்க வேண்டும். இன்று விஜய் நடிப்பில் இருந்து ஒதுங்கி அரசியலுக்குப் போயிருக்கிறார்.
அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜய்யைப் பிடிக்கும். எனக்கும் அவரைப் பிடிக்கும், என்னையும் அவருக்குப் பிடிக்கும். அவர் அரசியலுக்குச் சென்றுள்ளது அவருடைய விருப்பம்" என்று சூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications