இருக்கு உங்களுக்கு.. எடப்பாடியை இழிவுபடுத்த நினைத்தால் தேவரே தண்டிப்பார்.. சாபம் விட்ட அதிமுக மாஜி!
மதுரை: தேவரின் முகக்கவசத்தை அணிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் பசும்பொன்னில் இருக்கக்கூடிய தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிலர் முழக்கமிட்டதோடு, கற்களையும், காலணிகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாக கொண்டிருக்கக்கூடிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவில் வரலாறு காணாத வரவேற்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமிகள் ஏதோ தெய்வத்திருமகனார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்கிறார்கள்.

அந்த சுயநல கயவர்களிடமிருந்து தெய்வத்திருமகனார் ஒரு தேசிய தலைவர் ஒரு சுதந்திரப் போராட்டத் தலைவர், சர்வ ஜாதிகளுக்கும் சர்வ மதத்திற்கும் அனைத்து பிரிவினருக்கும் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்து காட்டுகின்ற வகையில் வெற்றி திருமகனாரை அந்த பசும்பொன் பூமியில் அஞ்சாத நெஞ்சு உறுதியோடு நேரிலே வந்திருந்து உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சொல்லி உண்மையான தேவர் திருத்தொண்டார்கள் முத்துராமலிங்கத் தேவரின் வழித்தோன்றல்கள் அந்த மண்ணிலே பிறந்தவர்கள் அவரது புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அனைவருமே கைகூப்பி வணங்கி வாழ்த்து சொல்லி வரவேற்ற காட்சியை எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது.
கரு மேனியாக இருந்த தேவருக்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 13 கிலோ அளவில் தங்க கவசம் கொடுத்ததை நீதிமன்றம் வரை சென்று சர்ச்சையாகிய நிலையில் தங்க கவசத்தை எடுத்துக் கொடுப்பதற்கு சில விஷமிகளால் தடை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தேவரின் ஆசியோடு இபிஎஸ் அவர்கள் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய நிலையில் அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் அதைப் பெற்று தேவர் நினைவாலய டிரஸ்டியாக இருக்கக்கூடிய காந்திமீனாள் அவர்களிடத்தில் ஒப்படைத்தார்.
தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்ட அந்த வரலாற்றை உருவாக்கிய பெருமை EPS க்கு உண்டு. கடந்த ஆண்டுகளிலே ஏன் வரவில்லை என்பதற்கு கேள்வியாக வைத்து சொல்லப்பட்டு வந்தாலும் அதற்காக பல்வேறு அரசியல் காரணங்கள் சொல்லப்பட்டதும் உண்மையிலேயே ஒரு பொய் பிரச்சாரம். நான்கு முறை முதல்வராக இருந்த போதும் எடப்பாடி பழனிசாமி தான் முதலில் அஞ்சலி செலுத்தினார். மூன்று நாட்கள் நடைபெறக்கூடிய விழாவில் முதல் நாள் ஆன்மீக விழா, இரண்டாவது நாள் அரசியல் விழா, மூன்றாவது நாள் அரசு விழாவாக 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களில் 30ஆம் தேதி நடைபெறுகின்ற விழாவிலே முதல் நபராக ஈபிஎஸ் அவர்கள் முதலமைச்சராக இருந்து மரியாதை செலுத்திய வரலாற்றையும் சில விஷமிகள் திட்டம் தீட்டி மறைக்கிறார்கள்.
என்னுடைய 50 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரையும் வரவேற்கக்கூடிய ஒரு புண்ணிய பூமியாகத்தான் பசும்பொன் இருந்து வருகிறது. சமீப காலமாக சில கயவர்கள், சுயநலவாதிகள், கையாலாகாதவர்கள், அரசியலில் தோல்வியுற்றவர்கள், அரசியலிலே முகவரி இழந்தவர்கள், அரசியலிலே காணாமல் போனவர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய கவசத்தை முகமூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பை தேடுவது ஒன்றும் குற்றமல்ல. அவர் எல்லோரையும் வாழ வைப்பார். ஆனால் அந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு பிறரை இழிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால், சிலரை நீங்கள் அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அவதூறு பரப்ப வேண்டும் என்று நினைத்தால், நான் உறுதியாக சொல்கின்றேன், நான் கண்ட அனுபவத்தில் சொல்கின்றேன். நான் நேரிலே உணர்ந்த அந்த வரலாற்றிலே சொல்கிறேன் புண்ணிய பூமி ஆக இருக்கக்கூடிய அந்த பசும்பொன்னில் இருக்கக்கூடிய அந்த தேவர் நிச்சயமாக அவர்களை தண்டிப்பார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்பாடு செய்யப்பட்டு திட்டமிட்டு கயவர்கள் செய்ததை தோல்வியடையச் செய்து இதோ தேவரை நான் காண வருகிறேன், அவர் ஆசி பெற வருகிறேன் என்று சொல்லி தேவருடைய ஆசியைப் பெற்று இருக்கின்ற எடப்பாடியார் அவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்துகின்ற இந்த சலசலப்பும் இந்த குள்ளநரி கூட்டத்தினருடைய சலசலப்பும் சுயநலவாதிகள் உடைய சலசலப்பும் தேவரின் வழித்தோன்றலுக்கும் ரத்தத்தின் ரத்தங்களுக்கும் வீரமங்கை வேலுநாச்சியாருடைய வழித்தோன்றலாக இருக்கக்கூடிய புறநானூற்று தாய்மார்கள் இடத்திலும் எந்தவிதமான சலசலப்பையும் ஏற்படுத்த முடியாது என்பதை இங்கே நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications