உதயநிதி மு.க.அழகிரி சந்திப்பால் பாலாறும் தேனாறும் ஓடப்போகிறதா? “மதுரை ஏற்கனவே தொல்லை”- மாஜி காட்டம்!
மதுரை : உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு மூலம் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடப் போகிறது? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழ்நாட்டில் இதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலலிதா சிலைகளுக்கு, அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, உதயநிதி ஸ்டாலின் - முக அழகிரி சந்திப்பு பற்றி விமர்சித்துப் பேசியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் பலியான வீரர் குடும்பத்தினருக்கு அரசு வேலை? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
உதயநிதி ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு
இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக நேற்று இரவு மதுரை வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பா மு.க.அழகிரியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு குறித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, "என் தம்பி மகன் என்ற முறையில் ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளார். அமைச்சராகியுள்ள உதயநிதியை வாழ்த்தியது எல்லை இல்லாத மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளார்.
மாஜி அமைச்சர்
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் - மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலலிதா ஆகியோரின் முழு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பாலாறும் தேனாறும் ஓடப் போகிறதா
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகின்றதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. மதுரையில் ஏற்கனவே ரவுடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்ன நடக்கப் போகிறது? ஒன்றுமே கிடையாது.
விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டுப் பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தட்டிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். அவர் பொறுப்பாகச் செயல்படவில்லை. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லா இடங்களிலும் உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக பேசி வருகிறார்." என விமர்சித்தார்.
மோடிஜியின் கனவுத் திட்டம்
மேலும், "ஆளுநர் உரையின் போது திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநரை எதிர்த்து தரக்குறைவாக கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழ்நாடு மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்கக் கூடாது. இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம். வருகின்ற நாடாளுமன்றத்தோடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் செலவுகளை குறைக்க முடியும். இது மோடிஜியின் கனவுத் திட்டம், வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற நினைக்கிறார்." எனத் தெரிவித்தார்.
நடிகர்கள்
மேலும் பேசிய அவர், "கருணாநிதியை கலைஞர் என்று ஏன் குறிப்பிடுகிறோம்? அவர் நடிக்கக்கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள்தான். திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, எதிர்பார்த்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கடன் சுமை அதிகரித்துள்ளது, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தரவில்லை என அடுக்கிக்கொண்டே போகலாம்.
எம்ஜிஆர் பெரியப்பா
மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்கத்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும். எம்ஜிஆரை பெரியப்பா எனச் சொல்லும் மு.க.ஸ்டாலின் எம்ஜிஆர் சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜுக்கு குறைந்த நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.