எடப்பாடி பழனிசாமிக்கு ‘தாமரை’.. சிக்னல் காட்டிய மதுரை ர.ரக்கள்.. ஓபிஎஸ் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..!?
மதுரை : அதிமுகவில் நிலவி வரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலில், தாமரைக் கட்சித் தலைமையின் ஆதரவைப் பெறுவதில் இருவரும் போட்டா போட்டி நடத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு 'தாமரை' மாலை அணிவித்து வெற்றிக்குறி காட்டியுள்ளனர் மதுரை ர.ரக்கள்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முன்னதாக, மதுரை விமான விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர்.

சவுத் விசிட்
அதிமுகவில் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே தொடர்ந்து யுத்தம் நடந்து வருகிறது. இந்நிலையில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட பயணம் மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் எடப்பாடி பழனிசாமி, முதன் முறையாக தென்மாவட்டங்களுக்கு வந்துள்ளார். அதற்காக அவர் இன்று காலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

செல்வாக்கை காட்ட
அதிமுகவில் ஒட்டுமொத்த செல்வாக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களில் பிரமாண்ட சுற்றுப்பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை விமான நிலையத்தின் பயணிகள் வருகை வாயிலின் முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, ஆகியோர் தலைமையில் மேடை அமைத்து, ஆளுயர மாலை அணிவித்து தொண்டர்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

‘தாமரை’ மாலை
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் 'தாமரை' மாலை அணிவித்து வரவேற்றனர். தாமரைக் கட்சியின் ஆதரவைப் பெறுவதில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் போரே நடந்து வரும் நிலையில், மதுரை ர.ரக்கள் தாமரை மாலை அணிவித்து சிக்னல் காட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

2 பொதுக்கூட்டங்கள்
மதுரை விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சிவகாசி புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். சிவகாசியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் சென்னை புறப்படுகிறார்.

ஓபிஎஸ் ராஜ்ஜியத்தில்
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மற்றும் தென் மாவட்டங்களில் அவருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. அதை உடைக்கும் முயற்சிகளிலேயே எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். தேனியிலேயே ஆர்பி உதயகுமாரை வைத்து பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தி பல்ஸ் பார்த்த எடப்பாடி பழனிசாமி, தனது தென் மண்டல விசிட் ஓபிஎஸ் தரப்புக்கு கிலி கொடுக்க வேண்டும் என பல வாரங்களாக திட்டமிட்டு வந்தார்.

கரம் கோர்த்த மூவர்
கொங்கு, வடக்கு மாவட்டங்களுக்கு பல முறை சென்றாலும், தென் மாவட்ட பயணம் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே வந்தது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோர், பொறுப்பை ஏற்பதாக உறுதியளிக்க, மதுரை விசிட்டை பிளான் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக மாபெரும் கூட்டத்தை திரட்ட எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.

அசரவைத்த பஸ்
செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா ஆகிய மூவரும் கடந்த கால கசப்புகளை மறந்து ஈபிஎஸ் வரவேற்பு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ராஜ் சத்யன் ஏற்பாட்டில் மதுரை மாநகரம் முழுவதும் பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு பேருந்துகளை உலவ விட்டுள்ளனர். அந்த பேருந்துகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கலர்ஃபுல்லாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு ஆச்சர்யப்பட்டுச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications