மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை… அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கே.எஸ். அழகிரி விமர்சனம்
மதுரை: மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து உள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: அதிமுக - பாஜக கூட்டணி என்பது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இந்தியாவினுடைய பொருளாதாரத்தையும், பாதுகாப்பையும் வீணாக்கிய ஒரு கூட்டணி .
தமிழகத்தில் ஊழல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சியும், மதத்திலும், ஜாதியிலும் நம்பிக்கை கொண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. எனவே , அந்தக் கூட்டணி மக்களுடைய நம்பிக்கையைப் பெற முடியாது என்பது என்னுடைய கருத்து.

மோடி பிரச்சாரம்
மோடி தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் செய்கிற பொழுது தமிழருடைய கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறார். தமிழ்மொழியை பற்றி பேசுகிறார் . ஆனால் தமிழகத்திலேயே அவர்கள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கிடையாது.

தேசப்பற்று கிடையாது
ஒரு நாட்டினுடைய பிரதம மந்திரியும், முதலமைச்சரும் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது தேசியகீதம் கிடையாது என்று சொன்னால் அவர்களுடைய தேசப்பற்றையும், மொழிப்பற்றையும் நாம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த அளவிற்கு அக்கறை இல்லாத ஒரு கூட்டம் .

மோடிக்கு கேள்வி
அரசியல் சம்பந்தமான ரபேல் ஊழல் வழக்கில் ராணுவத்தினுடைய கோப்புகள் காணாமல் போயிருக்கின்றன. ராணுவத்தினுடைய கோப்புகளை பாதுகாக்க முடியாத மோடி அரசாங்கம், இந்தியாவுக்கு பாதுகாப்பு அளிக்குமா என்பதை காங்கிரசின் வாயிலாக நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

சிறிய நிலப்பரப்பு
தமிழகத்திலேயே வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். தமிழகத்தினுடைய நிலப்பரப்பை விட சிறிய நிலப்பரப்பான இங்கிலாந்து, ஜப்பான் தென் கொரியா நாடுகளில் ஏற்பட்ட வளர்ச்சி, ஏன் தமிழகத்தில் கொண்டுவர முடியாது என்பது தான் காங்கிரஸ் கட்சியினுடைய கேள்வி.

வளர்ச்சி நிறைந்த மாநிலம்
எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னால் தமிழகத்தை ஒரு வளர்ச்சி நிறைந்த மாநிலமாக எங்களால் ஆக்கிக் காட்ட முடியும் . கூட்டணிக் கட்சிகள் அதற்காக பாடுபடுவார்கள், செயல்படுவார்கள் . எங்களுடைய தேர்தல் அறிக்கை வளர்ச்சி என்பதை மையமாகக் கொண்டது தான் .

தேர்தல் அறிக்கை
எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு அம்சம் தான் . எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட ஒன்று . எனவே அந்த வகையில் எங்களுடைய தேர்தல் அறிக்கை தமிழகத்திலும், இந்தியாவிலும் சிறப்பாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications