அதிமுக மாநாடு எக்ஸ்பிரஸ்! சென்னையிலிருந்து மதுரைக்கு இன்றிரவு சிறப்பு ரயில்! நான் ஸ்டாப் பயணம்!
மதுரை: மதுரையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்காக சென்னையிலிருந்து சிறப்பு ரயில் ஒன்று இன்றிரவு இயக்கப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இரவு சுமார் 10 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயிலானது நாளை காலை மதுரை சென்றடைய உள்ளது. அங்கு மாவட்ட வாரியாக புக் செய்யப்பட்டுள்ள திருமண மண்டபங்களுக்கு தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு ஓய்வெடுக்க வைக்கப்படவுள்ளனர்.

சிறப்பு ரயில் இயக்குவதற்கான தொகையை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் முன்கூட்டியே ரயில்வே நிர்வாகத்திடம் கட்டிவிட்டனர். இதனிடையே இந்த சிறப்பு ரயிலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான தொண்டர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு நீண்ட தூரப் பயணம் என்பதாலும் தனித்தனியாக வேன், பேருந்து என வாடகைக்குப் பிடித்தால் கூடுதல் செலவாகும் என்பததோடு ஒருங்கிணைப்பதும் கடினம் என்பதால் இந்த சிறப்பு ரயில் திட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
ரயில்வே அமைச்சகத்திடம் பேச வேண்டிய ஆட்கள் மூலம் பேசி இந்த ஏற்பாட்டை அதிமுக தலைமை செய்து கொடுத்திருக்கிறது. அதேபோல் ஆகஸ்ட் 20ஆம் தேதி இரவு மதுரையிலிருந்து மீண்டும் சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னையிலிருந்து இயக்கப்படும் ஒரு சிறப்பு ரயில் போதாது எனக் கருதும் அதிமுக தலைமை, கூடுதலாக இன்னொரு சிறப்பு ரயிலை நாளை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்ட அதிமுக தொண்டர்களையும் அலைச்சலின்றி மதுரை அழைத்து வர முடியும் எனக் கருதப்படுகிறது.
மாநாடு நடைபெறும் இடத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதியன்று காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் கட்டணமின்றி உணவு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கட்சித் தொண்டர்களுக்கு வயிராற சாப்பாடு போடும் பொறுப்பை மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications