கூட்டணி குறித்து பழைய கட்டுக் கதை.. அரைத்த மாவையே அரைக்கும் திமுக! புகார்களை அடுக்கிய அதிமுக!
மதுரை: அரசின் மெத்தனத்தால் போதைப் பொருட்கள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது எனவும், அதிமுக கூட்டணி குறித்து திரித்து கட்டுக் கதைகளை பரப்பி அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பதை திமுக நிறுத்த வேண்டும் என அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதேபோல், 2026 இல் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமர வைப்பர் மக்கள் என அதிமுக மருத்துவ அணை இணைச் செயலாளர் சரவணன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக மருத்துவரணி சார்பில் மதுரை சரவணா மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இரத்ததான முகாமை அதிமுக மகளிரணி துணைச் செயலாளரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் துவக்கி வைத்தார். இதில் 72 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரத்த தானம் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து டாக்டர் சரவணன், காயத்ரி ரகுராம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய காயத்ரி," அரசின் மெத்தன போக்கால் தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து உள்ளது. மாணவர்கள் உட்பட போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் அதிகரித்துள்ளது. திமுகவில் இருப்பவர்களே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
போதைப் பொருள் புழக்கத்தால் பாலியல், கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மக்களை மூளை சலவை செய்து திசை திருப்புவதிலேயே திமுக குறியாக உள்ளது. மக்கள் வறுமையில் சிக்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மாடல் ஆட்சி என்று எதுவும் இல்லை. ஸ்டாலின் மட்டுமே மாடலாக வலம் வருகிறார். அதிமுக கூட்டணி குறித்து திரித்து கட்டுக் கதைகளை பற்றி அரைத்த மாவை அரைத்து கொண்டிருப்பதை திமுக நிறுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் சரவணன்," முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஒன்றும் ஊதி அணைக்க கூடிய தீக்குச்சி இல்லை என்று கூறியுள்ளார். இன்றைக்கு தமிழக மக்கள் எரிமலையாக உள்ளனர் என்பது ஸ்டாலினுக்கு தெரியுமா? இன்றைக்கு மளிகை பொருள் விலை உயர்வு, பால் விலை உயர்வு இதன் மூலம் பெண்கள் வயிறு எரிந்து வருகிறது. விவசாயிகள் உரிய கடன் வழங்கவில்லை நலத்திட்டங்கள் வழங்கவில்லை இதனால் விவசாயிகள் வயிறு பற்றி எரிகிறது.
மாணவர்களுக்கு மடிக்கணி திட்டம் வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் வயிறு பற்றி எரிகிறது. தாலிக் தங்கம் திட்டம் வழங்கவில்லை, இதனால் இளம் பெண்கள் வயிறு பற்றி எரிகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள் இதுவரை 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அதேபோல தொழில் நிறுவனங்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றன. இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் வயிறு பற்றி எரிகிறது.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது ரோம் நகர் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல இன்றைக்கு முதலமைச்சர் உள்ளார், ஆனால் தமிழக மக்கள் எரிமலையாய் இந்த ஆட்சி மீது உள்ளார்கள். திமுக ஆட்சியை அப்புறப்படுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமை கூட்டணி அமையும், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications