ஓ.பி.ரவீந்திரநாத் சுயேச்சை எம்பி.. அவர் எப்போதும் அதிமுக எம்பியாக இருந்ததில்லை! ராஜன் செல்லப்பா பரபர
மதுரை: அதிமுக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகியும் எம்எல்ஏவுமான ராஜன் செல்லப்பா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி, தென்பழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் கிளாஸ் உபகரணங்களை ராஜன் செல்லப்பா வழங்கினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ராஜன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
கோவை செல்வராஜ் எந்தக் கட்சி.. அதிமுக என்றால் நாங்கள் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
ராஜன் செல்லப்பா
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, "கடந்த முறை சட்டசபை கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் நான் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தேன். அவர் பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், இப்போது வரை அதற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. பள்ளிக்கல்வித் துறை தனியாக ஒரு மேலாண்மை குழுவை அமைக்க வேண்டும். அந்த குழு மூலம் பள்ளிகளுக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
பள்ளிகள்
கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். எனவே அரசுப் பள்ளி கட்டிடங்களைச் சீரமைக்கச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும். இதனைத் தமிழ்நாடு அரசு சீக்கிரம் செய்ய வேண்டும். அடுத்து நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரிலும் கூட இது குறித்து குரல் எழுப்ப உள்ளேன்.
சிறப்புப் பள்ளிகள்
தமிழகத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகள் 100க்கு ஒன்று அல்லது 1000 பள்ளிகளுக்கு ஒன்றைச் சிறப்புப் பள்ளியாக நாம் மாற்ற வேண்டும். எப்படிச் சிறந்த போலீஸ் நிலையத்திற்கு எனத் தனியாகப் பரிசுகளைக் கொடுக்கிறார்களோ, அதேபோல சிறந்த அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு பரிசுகளை வழங்க வேண்டும். அரசு கட்டிடங்களை மேம்படுத்தும் திட்டம் வெறும் அறிவிப்பு உடன் நின்றுவிட்டது, நடைமுறைக்கு வரவில்லை" என்றார்
எடப்பாடி தலைமை
சசிகலா உடன் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக செயல்படுகிறது. அதை நீதிமன்றத்திலும், காவல் நிலையத்திலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக மக்களும் அதே தான் சொல்கிறார்கள். எடப்பாடியின் தலைமை கீழ் அதிமுக இருந்தால்தான் திமுகவை வலுவோடு எதிர்க்க முடியும். வலிமையான எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என்பதாலேயே எடப்பாடியின் தலைமையில் அதிமுக செயல்படுகிறது.
ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை
தேனி எம்பி ரவீந்திரநாத், தான் ஒரு அதிமுக எம்பி என்று அவரே கூறிக் கொள்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்து இது தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. ஓ.பி. ரவீந்திரநாத் அதிமுகவில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லை. அவர் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சுயேச்சையான எம்பியாக இருக்கலாம். அதிமுக எம்பியாக இருந்த சமயத்திலேயே அவர் சுயேச்சை எம்பி போலத்தான் செயல்பட்டார். என்றைக்கும் அவர் அதிமுக கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்ததே இல்லை.
தேர்தல் ஆணையம்
அனைத்து கட்சி கூட்டம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடமிருந்து எடப்பாடி தரப்புக்குத் தான் முதலில் அழைப்பும் வந்தது. எங்களை நீதிமன்றம் ஏற்கனவே அங்கீகரித்து விட்டது. தேர்தல் ஆணையம் மட்டும் தான் இனி அறிவிக்க வேண்டும். அடுத்த முறை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, சட்டசபைத் தேர்தலிலும் சரி பெரிய வெற்றியைப் பெறுவோம்.
மதுரை எய்ம்ஸ்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஆறு மாதங்களில் தொடங்கப்படும் என அமைச்சர் கூறி இருந்தார் கூறினார். அவர் எந்த அடிப்படையில் இப்படிக் கூறினார் எனத் தெரியவில்லை. விரைவில் நிச்சயமாகத் திருப்பரங்குன்றம் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்" என்று தெரிவித்தார்.