விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததா? எடப்பாடி பழனிசாமி கொடுத்த விளக்கம்!
மதுரை: அதிமுக - தவெக இடையில் இதுவரை எந்தவொரு கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனது பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடி அசைத்ததாலேயே பிள்ளையார் சுழி போட்டதாக கூறினேன் என்ற எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நெருங்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பின் தவெகவுக்கு ஆதரவாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தனர். சட்டசபையில் தவெகவின் குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசி இருந்தார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் நேரடியாக விஜய் கூட்டணிக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதேபோல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், தவெக என்ற கட்சியையே இல்லாமல் செய்துவிடும் என்றும் எச்சரித்தனர். ஆனால் தவெக தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. கடந்த ஒரு மாதமாகவே விஜய் அமைதி காத்து வரும் நிலையில், தவெகவினர் இப்போது தான் இயல்புக்கு திரும்பி இருக்கின்றனர்.
இதனிடையே அதிமுக - தவெக கூட்டணி அமையப் போவதாக தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தது. அமித்ஷா மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் சில தகவல் கசிந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தவெகவுடன் அதிமுக இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தவில்லை.
அதேபோல் தவெகவும் அதிமுகவுடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் செய்யவில்லை. எனது பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவின் தொண்டர்கள் கொடி அசைத்து ஆரவாரமாக இருந்தனர். அப்போது தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக கூறினேன். அவர்கள் தவெகவின் கட்சிக் கொடியைதான் காட்டினார்கள். அதனால் அந்தக் கட்சித் தலைவர் எடுக்கும் முடிவு தான்.
அதனால் அதிமுக - தவெக இடையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் கூட்டணி தொடார்பாக நடக்கவில்லை. எங்கள் கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடியசைப்பது தவறு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவின் அழைப்பை தவெக நிராகரித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக தொடர்பாக கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி பேசாமல் அமைதி காத்திருக்கிறார்.
முதல்வர் வேட்பாளர் என்பதை விட்டுக்கொடுக்க விஜய் விரும்பவில்லை. இதன் காரணமாக அதிமுக - தவெக கூட்டணி அமையவில்லை என்றும் பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தேர்தல் நெருங்கும் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதனால் விஜய்யின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications