அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! குடும்பத்தினர் விளக்கம்
மதுரை: காவல்துறையின் சித்ரவதையால் உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நவீன் குமாரையும் வீட்டில் இருந்து அழைத்து சென்று போலீசார் தாக்கினார்கள். இந்த நிலையில் நவீன் குமார் காலில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
திருப்புவனத்தைச் சேர்ந்த அஜித் குமார் காவல்துறையினர் கொடூர சித்ரவதை காரணமாக உயிரிழந்தார். நகை திருட்டு வழக்கின் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் குமாருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் பிறப்புறுப்பில் மிளகாய் பொடி போட்டு சித்ரவதை செய்திருக்கின்றனர். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மட்டும் 44 காயங்கள் உடலில் இருந்தது தெரிய வந்தது.

அஜித் குமார் மரணம்
இதனை நீதிமன்றம், மாநிலம் தனது குடிமகனையே கொலை செய்துவிட்டது என்று கண்டித்தது. இதன்பின் தமிழக அரசு தரப்பில் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதேபோல் மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக அரசு தரப்பில் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியும், அஜித் குமார் சகோதரர் நவீன் குமாருக்கு அரசுப் பணியும் அளிக்கப்பட்டது.
நவீன் குமாருக்கும் சித்ரவதை
ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் பணி அளிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட அவரின் சகோதரர் நவீன் குமாரும் கொடூரமாக தாக்கப்பட்டார். நவீன் குமாரை அடித்தால், அஜித் குமார் உண்மையை ஒப்புக் கொள்வார் என்ற நோக்கில் நவீன் குமாரையும் போலீசார் விட்டு வைக்கவில்லை.
மருத்துவமனையில் நவீன் குமார்
இதனைத் தொடர்ந்து அஜித் குமார் தாயார் மற்றும் சகோதரர் நவீன் குமார் ஆகியோர் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணைக்கு ஆஜராகி தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று திடீரென அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் மதுரை மாவட்ட ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடும்பத்தினர் விளக்கம்
இதுகுறித்து அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் பேசுகையில், அஜித் குமாரிடம் விசாரணை மேற்கொண்ட போது நவீன் குமாரின் கை, கால்களில் அடித்துள்ளனர். கைகளில் பெரியளவில் வலி இல்லை.. ஆனால் கால்களில் வலி இருந்துள்ளது. காலின் பாதங்களில் வலி இருந்ததால், அவரால் நடக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நேற்றே மருத்துவமனைக்கு வரலாம் என்று நினைத்தோம். ஆனால் வர முடியவில்லை.
போலீசாரின் அடி
இன்று காலை ரொம்ப வலிக்கிறது என்று அழைத்தார். இதன்பின் மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். இந்த வலி போலீஸ்காரர்கள் அடித்ததால் ஏற்பட்டது என்று எழுதி கொடுத்துள்ளோம். நவீன் குமாருக்கு பெரிய காயம் இல்லை. நன்றாக சாப்பிட்டு அமர்ந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களுக்கு பின்னரும் நவீன் குமாரின் கால்களில் போலீசார் அடித்ததால் வலி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications