தவெக கொடியை காட்டியதால் பறிபோன பரிசு.. வென்ற காளைக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடந்த சம்பவம்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தவெக கொடியை காண்பித்த நபரின் மாடு வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பரிசு வழங்கப்படவில்லை. ‛‛இந்த மாட்டை அவிழ்க்க முடியாது.. மாட்டிற்கு பரிசு இல்லை. கேள்விக்குறி மாட்டிற்கு பரிசு இல்லை'' என்று மைக்கில் அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையொட்டி மதுரையில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.

வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை வீரர்கள் தழுவி பரிசுகளை வென்று வருகின்றனர். அதேபோல் தன்னை தழுவ வரும் வீரர்களை மாடுகள் முட்டி தூக்கி வீசி உரிமையாளர்களை பரிசுகளை பெற்று கொடுக்கிறது.
விறுவிறுப்பாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 3.45 மணியளவில் மதுரை மாவட்டம் விஜயன்பன் என்பவரின் காளை அவிழ்க்கப்பட்டது. அந்த காளை வாடி வாசலில் இருந்து வெளியே வர மறுத்தது.
இதையடுத்து ஜல்லிக்கட்டு வீரர்கள் காளையின் வரவேற்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கும் சைக்கிள் என்று பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த வேளையில் காளையை அழைத்த வந்த நபர் களத்தில் நின்றபடி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை தனது பாக்கெட்டில் இருந்து எடுத்து உயர்த்தி காண்பித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வர்ணனையாளர் மைக்கில், ‛‛மாட்டிற்கு பரிசு இல்லை. எல்லாம் வீடியோவில் ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு. இந்த மாட்டை அவிழ்க்க முடியாது'' என்றார். ஆனால் அதற்குள் வாடிவாசலில் நின்ற மாடு சீறிப்பாய்ந்து வெளியே வந்தது. அதனை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் மைக்கில், ‛‛இந்த கேள்விக்குறி மாட்டிற்குபரிசு இல்லை. இதுவெல்லாம் தேவையா பா'' என்று காளையுடன் வந்தவரை நோக்கி கூறினார்.
ஆனால் அந்த நபர் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தவெக கொடியை உயர்த்தி காண்பித்து கொண்டு வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications