2 நாள்ல எங்களுக்கு வேண்டிய தொகுதி கிடைச்சிரும்.. நம்பிக்கையின் உச்சத்தில் திருமா
மதுரை:திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டொரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக கூட்டணியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நிறைவடைந்துள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் விவரம் விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் முதலில் உருவான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி தான்.
மெகா கூட்டணி
தொகுதி பங்கீட்டை முதலில் நடத்தியதும் திமுக தலைமையிலான கூட்டணிதான். 9 கட்சிகளை கொண்ட ஒரு மெகா கூட்டணியாகவும் இது விளங்குகிறது. சுமூகமான மற்றும் இணக்கமான முறையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தேறியுள்ளது.
தொகுதிகளின் எண்ணிக்கை
இரண்டொரு நாட்களில் தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படும். நடைபெற இருக்கும் லோக்சபா மக்களவை தேர்தல் சனாதன சக்திகளுக்கு எதிரான தர்ம யுத்தம்.
தேர்தல் பிரச்சாரம் எப்போது?
அகில இந்திய அளவில் பல சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும் என்ற வகையில் திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்தை முன்னெடுப்போம். ஆளும் கட்சியான பாஜக, அதிமுக கட்சிகளுக்கு எதிரான உளவியல் மக்களிடையே உள்ளது.
கூட்டணிக்கு வெற்றி
எனவே இந்த தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். தேமுதிக தேர்தல் தொடர்பாக எந்த நிலைப்பாட்டை எடுக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். திமுக கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பதை திமுக தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.