வன்னியர் இட ஒதுக்கீடு! தேவர் -யாதவர் -தேவேந்திர குல வேளாளர் சமூக பிரதிநிதிகளை சந்தித்த அன்புமணி!
மதுரை: வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புமாறு, தேவர், யாதவர், தேவேந்திர குல வேளாளர், நாயுடு, உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து அன்புமணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வன்னியர்களை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பக் கோரியிருந்தார் அன்புமணி.

வரும் மே 31ஆம் தேதிக்குள் இக்கடிதத்தை முதலமைச்சருக்கு வன்னியர் சமுதாய மக்கள் அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி அன்புமணியும் அவரது குடும்பத்தினரும் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்வருக்கு தனி தனிக்கடிதம் அனுப்பினார்கள்.
இந்நிலையில் மற்ற சமுதாய மக்களிடமும் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். 4 நாட்களுக்கு முன்னர் பாமக 2.0 விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திண்டுக்கல் சென்ற அன்புமணி ராமதாஸ் அங்கு பல்வேறு சமுதாய மக்களையும் சந்தித்து ஆதரவு கோரினார்.
குறிப்பாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்ற அன்புமணி, தேவர், யாதவர், தேவேந்திர குல வேளாளர், நாயுடு, உள்ளிட்ட சமுதாய மக்களிடம் தங்களுக்கு ஆதரவாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரக்கோரி கடிதம் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
இதேபோல் திண்டுக்கல்லில் அதிகம் வசிக்கும் கிறிஸ்துவ வன்னியர் சமுதாய மக்களை வீடு வீடாக சந்தித்து அவர்களிடமும் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.

அன்புமணி ராமதாஸ் இந்தப் பயணத்தை மேற்கொண்ட போது திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இருப்பினும் குடை பிடித்தபடி சென்று தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார் அன்புமணி.
வன்னியர்களுக்கு சமூக நீதி வழங்குவதில் கட்சி சார்போ, அரசியல் நிலைப்பாடோ எந்த வகையிலும் தடையாக இருக்கக்கூடாது என்பது அன்புமணியின் முழக்கமாக உள்ளது.












Click it and Unblock the Notifications