தொண்டர்களை மிரட்ட நீங்கள் யார்..? காரிலிருந்து இறங்கி காவல் ஆய்வாளரிடம் கடுகடுத்த அண்ணாமலை..!
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக தொண்டர்களை ஏன் மிரட்டுகிறீர்கள் எனக் கூறி, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காவல் ஆய்வாளரிடம் கடுகடுத்த நிகழ்வு நடந்துள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அண்ணாமலையை வரவேற்பதற்காக, உசிலம்பட்டியில் பாஜக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.
இதனிடையே தங்களுக்காக காரிலிருந்து இறங்கி காவல் ஆய்வாளரிடம் நியாயம் கேட்டதற்காக உசிலம்பட்டி பகுதி பாஜகவினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

அண்ணாமலை பயணம்
முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக்கொடுப்பதாக குற்றஞ்சாட்டி பாஜக சார்பில் தேனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக தேனிக்கு சென்றார். அப்போது அவருக்கு பல இடங்களில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.

உசிலம்பட்டியில் வரவேற்பு
அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 25-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை வரவேற்பதற்காக காத்திருந்தனர். அவர்களை கண்டதும் காரை நிறுத்தி அவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அண்ணாமலை, பிறகு காரில் ஏறியிருக்கிறார். அவ்வாறு அவர் காரில் ஏறி அமர்வதற்குள் அங்கிருந்த கூட்டத்தை காவலர்கள் கலைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அண்ணாமலையிடம் கையில் பொன்னாடை கொடுக்க வந்த பாஜக தொண்டர் ஒருவரை காவல் ஆய்வாளர் அவர் அருகில் செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

மிரட்ட வேண்டாம்
இதனால் கடும் கோபம் அடைந்த அண்ணாமலை, திடீரென காரிலிருந்து இறங்கி தொண்டர்களை மிரட்டாதீர்கள் என எச்சரிக்கை விடுத்ததுடன் அவர்களை தடுக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என காவல் ஆய்வாளரிடம் வினவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் சற்று நிமிடம் உசிலம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியிருக்கிறது. இதனிடையே தேனியில் ஆர்ப்பாட்டத்தை முடித்த கையோடு பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இல்லத்துக்கு சென்று சிறிதிநேரம் பேசிவிட்டு புறப்பட்டிருக்கிறார் அண்ணாமலை.

எதிர்பார்த்த கூட்டம்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்பார்த்த கூட்டம் திரண்டிருந்ததால் அண்ணாமலை மகிழ்ச்சியான மன நிலையிலேயே மதுரைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பாஜகவினர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications