அரியலூர் மாணவி உடலை பெற்றுக்கொண்டு.. இறுதி சடங்குகளை செய்ய பெற்றோருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
மதுரை: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இதில் நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளியில் அரியலூர் வடுகர் பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் +2 படித்து வந்தார்.
அந்த மாணவிக்குக் கடந்த ஜன. 9ஆம் தேதி தொடர்ந்து வாந்தி ஏற்படவே, பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மாணவி உயிரிழப்பு
அப்போது மாணவி தான் பூச்சி மருந்தைச் சாப்பிட்டதாகக் கூறியதால் பதற்றமடைந்த பெற்றோர் உடனடியாக அவரை தஞ்சை அரசு மருத்துவமனையில் ஜனவரி 15இல் சேர்த்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 19இல் உயிரிழந்தார். இதற்கிடையே சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை மதமாறும்படி பள்ளியில் கட்டாயப்படுத்தியதாகவும் அதற்குத் தான் ஒத்துக் கொள்ளாததால் தன்னிடம் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக அந்த மாணவி பேசும் வீடியோ இணையத்தில் வெளியானது.

சிபிசிஐடி விசாரணை
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. மேலும், மாணவியின் பெற்றோரும் உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இந்தச் சூழலில் மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் அவசர மனுத் தாக்கல் செய்தார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

வாக்குமூலம்
இந்த வழக்கின் விசாரணையில் காணொலி மூலம் ஆஜரான மாணவியின் பெற்றோர், நீதிபதி முன்னிலையிலேயே கண்ணீர் விட்டனர். இந்த வழக்கில் வாதங்களைக் கேட்ட நீதிபதி, "விடுதி வளாகத்தில் ஜன. 9இல் மாணவி பூச்சி மருந்தைக் குடித்துள்ளார். அதன் பின்னர் ஜன. 15இல் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவியிடம் ஜன. 16இல் திருக்காட்டுப்பள்ளி காவல் நிலைய பயிற்சி சார்பு ஆய்வாளர் வாக்குமூலம் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் பிரேதப் பரிசோதனை தேவையில்லை
இதற்கிடையே மாணவி சிகிச்சை பெற்று வந்த போது எடுக்கப்பட்ட வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தியதாக மாணவி குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவியின் உடலைத் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தடயவியல் வல்லுநர்கள் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். மாணவி விஷம் குடித்ததால் தான் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக யாரும் சந்தேகம் தெரிவிக்கப்படவில்லை. எனவே, மாணவியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
மாணவியின் உடலை இன்று அவரது பெற்றோர் பெற்றுக்கொண்டு சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இதற்கான ஏற்பாடுகளைத் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். இதில் போலீஸார் தலையிடக் கூடாது. மாணவியின் பெற்றோர் நீதித்துறை நடுவர் முன்பு நாளை ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அதை சீலிட்ட கவரில் வரும் திங்களன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல மருத்துவமனையில் மாணவியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த நபரைத் தொந்தரவு செய்யாமல், போலீசார் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications