எடப்பாடியார் ஜாதகம் பார்த்துட்டோம்.. உங்க வீட்டுக்கே வந்து காலிங் பெல் அடிப்போம்.. உதயகுமார் பேச்சு
மதுரை: இன்னும் 10 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற முடியாது என்று ஜோதிடர்கள் தெரிவித்திருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அதிமுக ஆட்சி வந்ததும் வாஷிங் மெஷின் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்களின் கேபிள் தொகையை ஓபிஎஸ் இபிஎஸ் செலுத்துவார்கள் என்றார்.

ராசியான முதல்வர்
பிரச்சாரத்தின்போது சமத்துவபுரத்தில் உள்ள தேநீர் கடைக்கு சென்ற அமைச்சர் உதயகுமார், தேனீர் தயாரித்து அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார். கூட்டத்தில் அமைச்சர் பேசியதை பாருங்கள்: எடப்பாடி பழனிச்சாமி ஒரு ராசியான முதலமைச்சர். ஜாதகம் பார்த்து சொல்லிவிட்டார்கள். இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு முதல்வராக அரியணையில் இருந்து அவரை நகர்த்த முடியாது.

பணம் கட்டிவிடுவார்கள்
பணம் கட்டவில்லை என்றால், நோ சிக்னல் என உங்கள் டிவியில் இதுநாள் வரை மெசேஜ் வந்து நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இனிமேல் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. முழு தொகையை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் செலுத்தி விட்டார் என்று மெசேஜ் வரும்.

காலிங் பெல் அடிப்போம்
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு உதயகுமாராகிய என்னை தேர்ந்தெடுத்து, அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வந்தால், கோப்பில் முதல் கையெழுத்து போடுவார். அவர் கையெழுத்து போட்டதும், நாங்கள் உங்கள் வீட்டுக்கு வந்து காலிங் பெல் அடிப்போம். நீங்கள் கதவை திறந்ததும் வாசல்படியில் என்ன இருக்கும் தெரியுமா? புத்தம்புது வாசிங் மெஷின் உங்களுக்காக இருக்கும். இவ்வாறு கூட்டத்தினர் ஆரவாரத்திற்கிடையே கலகலப்பாக பேசினார் அமைச்சர் உதயகுமார்.

அதிமுக தேர்தல் அறிக்கை
அதிமுக தேர்தல் அறிக்கையில், இலவச வாஷிங் மெஷின், கட்டணமில்லா கேபிள் சேவை உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் உதயகுமார் குறிப்பிட்டு பேசி வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications