அவனியாபுரத்தை தெறிக்க விட்ட காளைகள்.. மாஸ் காட்டிய காளையர்கள்! கார் பரிசு யாருக்கு?
மதுரை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்ற நிலையில் மாலை 6:30 மணியளவில் நிறைவடைந்தது. ஆயிரம் காலைகளும், 550 மாடுபிடி வீரர்களும் களமிறங்கிய நிலையில் 22 காளைகளை அடக்கிய வளையங்குளம் பாலமுருகன் முதலிடம் பெற்றார். அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் மூர்த்தி மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்ற பின்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் பங்கேற்பதற்காக 600 வீரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்திருந்த நிலையில் 573 பேர் பங்கேற்க வந்திருந்தனர். இதில் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 561 பேர் போட்டியில் பங்கேற்றனர்.

மொத்தம் இறுதிச்சுற்றோடு சேர்த்து 12 சுற்றுகள் நடைபெற்றது. விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாடு பிடி வீரர்கள் 27 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர்கள் 9 பேர் என 57பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 9 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மருத்துவ உபகரணங்களுடன் முதலுதவி சிகிச்சை மையம் அதிநவீன வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது. 100 பேர் கொண்ட மருத்துவ குழுவினர், 12 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து வாடிவாசல் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் அடக்கினர். அதே நேரத்தில் காளையர்களுக்கு ஈடு கொடுக்காமல் சுற்றி சுற்றி விளையாடிய மாடுகளை கண்டு பார்வையாளர்கள் உற்சாக முழக்கமிட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையர்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, டிவி, கட்டில், சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த வெளிநாட்டினர் போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
ஆரம்பத்தில் இருந்தே காளைகளை அடக்கிய வீரர்கள் ஒவ்வொரு சுற்றின் முடிவின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இறுதி ச்சுற்றின் முடிவில் வளையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். அவருக்கு விழா குழுவின் சார்பாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டர் வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கிய கார்த்தி இரண்டாம் இடத்தையும், 16 காளைகளை அடக்கிய அவனியாபுரம் ரஞ்சித் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். அவர்களுக்கு டூவீலர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறந்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications