Avaniyapuram Jallikattu: விறுவிறுப்பாக நடந்துவரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. 16 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்!
மதுரை: தைத்திருநாள் பொங்கல் பண்டிகையை ஒட்டி, மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,100 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்படும். 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளார்.
தைத் திருநாள் பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல், கரும்பு, புத்தாடையுடன் நினைவுக்கு வருவது தமிழர்களின் மற்றொரு அடையாளமான ஜல்லிக்கட்டு. உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

தைத்திருநாள் முதல்நாளான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுமார் 1,100 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றுள்ளன.
வாடிவாசலின் முன்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு முதல் காளையாக கோயில் காளை களமிறக்கப்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 2 ஆயிரத்து 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், பார்வையாளர்கள் எளிதில் பார்த்து ரசிக்கும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியை காண மதுரை மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஏராளமான பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, 12 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மருத்துவமனைகளிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை ஜல்லிக்கட்டு போட்டியில் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் புள்ளியை கணக்கிட ஸ்கோர்போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்இடி திரையில் வீரர்கள் அடக்கிய காளைகளின் எண்ணிக்கை திரையிடப்பட்டு வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, 8வது சுற்று முடிந்தது. 16 காளைகளை அடக்கி அவனியாபுரம் கார்த்தி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 7 சுற்று போட்டிகள் முடிவில் மொத்தம் 616 காளை அவிழ்த்து விடப்பட்டன. இவற்றில் 149 மாடுகள் மட்டும் பிடிபட்டன. இதில் 36 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். 50 பேர் காயமடைந்தனர். இவர்களில் 14 பேர் மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் ஒருவர் ஆவர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படு வருகின்றனர். போட்டியில் அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசு வழங்கப்படும். மேலும், இரு சக்கர வாகனங்கள், பீரோ, கட்டில், தங்க நாணயம், வெள்ளி பொருட்கள் என பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நாளை பாலமேட்டிலும் நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.












Click it and Unblock the Notifications