20 லட்சம் அபேஸ்.. மாட்டிக்கொண்ட பாஜக நிர்வாகிகள்.. “உங்களால் கட்சிக்கு களங்கம்”! அதிரடியாக டிஸ்மிஸ்!
சென்னை : என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக் கூறி, போலியாக ரெய்டு நடத்தி ரூ. 20 லட்சத்தை அபேஸ் செய்த பாஜக நிர்வாகிகள், கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகள் என கூறி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபரை மிரட்டி ரூ.20 லட்சம் பறித்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 6 பேர் கைதாகினர்.
இந்த கொள்ளை மோசடி விவகாரத்தில் கைதான பாஜக எஸ்சி எஸ்டி அணி மாவட்ட பொதுச் செயலாளர் வேங்கை அமரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் நீக்கப்பட்டுள்ளனர்.

என்.ஐ.ஏ சோதனை
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவர் சென்னையில் உள்ள பர்மா பஜாரில் தனது சகோதரர்கள் மாலிக், செல்லா, சித்திக் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்கு கடந்த 12ஆம் தேதி வந்த 6 பேர் கொண்ட குழுவினர் தாங்கள் என்ஐஏ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு உங்கள் வீட்டை சோதனையிட வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

20 லட்சம் அபேஸ்
இதனையடுத்து அப்துல்லாவின் வீட்டில் இருந்து 10 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் என்ற பெயரில் எடுத்துச் சென்ற அந்த மர்ம கும்பல், அவரது செல்போன் கடைக்கு சென்று அங்கிருந்தும் சோதனை என்கிற பெயரில் 10 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். பணத்திற்கான ஆவணங்களை தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு வருமாறு தெரிவித்துச் சென்ற நிலையில், அங்கு சென்ற அப்துல்லா சகோதரர்கள் விசாரித்தபோது தான் ரூ. 20 லட்சத்தை எடுத்துச் சென்றது என்ஐஏ அதிகாரிகள் இல்லையென்றும் கொள்ளை கும்பல் என்றும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

பாஜக நிர்வாகி
இதனையடுத்து அப்துல்லாவின் வீடு மற்றும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ராயபுரத்தைச் சேர்ந்தவரும், பாஜக நிர்வாகியுமான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி என தெரியவந்தது.

பாஜகவில் இருந்து நீக்கம்
இதனையடுத்து இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். பாஜக நிர்வாகி, மற்றும் அவரது கூட்டாளிகள், என்.ஐ.ஏ அதிகாரிகள் என ஏமாற்றி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவர் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகிகள்
இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பாஜக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் வேலு மற்றும் இளைஞரணி மாவட்ட செயலாளர் ஆர்.கார்த்திக் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications