திருமாவளவனின் இந்து பேச்சு.. "நாக்கை வெட்டுவோம்.." பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் மிரட்டல்!
மதுரை : இந்து மக்களை பிரிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு எங்கிருந்து யார் பாடம் புகட்டுகிறார்களோ தெரியாது. நாங்கள் பாடம் புகட்டுவோம், அவர்கள் நாக்கை வெட்டுவோம் என ஆவேசமாகப் பேசியுள்ளார் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன்.
தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் பிறந்த மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என மகா.சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்பது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பாஜகவினர் பலரும் திருமாவளவன், வெற்றிமாறன் ஆகியோருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுபற்றிய கேள்விக்கு இவ்வாறு ஆவேசமாகப் பேசியுள்ளார் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்.
டிராக்டர் டிரைலர் திருட்டு.. பாஜக மாவட்ட நிர்வாகி காவல் துறையினரால் கைது.. பரபரப்பு!
இல.கணேசன்
பாஜக மூத்த தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற்று வர வேண்டி மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள ஆதி சிவன் கோவிலில் மதுரை மாவட்ட பாஜக சார்பாக ஹோமம் நடத்தப்பட்டது. இதற்கு மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மகா.சுசீந்திரனிடம் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என சர்ச்சைகள் எழுந்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், "திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ.ராசா போன்றவர்கள் கைலாசா நாடு தொடங்கிய நித்தியானந்தாவை போல தனியாக ஒரு நாட்டை தொடங்கி இந்த கருத்துக்களை சொன்னால் நல்லது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலையை இவர்கள் காண வேண்டாம் என்று நான் எச்சரிக்கிறேன்.
மருது மன்னர்கள்
சத்ரபதி சிவாஜி, சின்ன மருது பெரிய மருது வாரிசுகள் நாங்கள். தேசத்தைக் காப்பதற்காக தன் அரசையும் சிரசையும் தியாகம் செய்தவர்கள் மருது பாண்டியர்கள். பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம் கொள்ள தன் வாழ்நாளை சிறையில் கழித்தது போக, 33 கிராம மக்களுக்கு தன் சொத்துகளை தானமாக கொடுத்த முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த பூமி இது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி வாழ்ந்த பூமி இது.
நாங்கள் பாடம் புகட்டுவோம்
இந்த பூமியில் தன் சுயலாபத்துக்காக, சுய விளம்பரத்திற்காக இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்க நினைக்கின்ற சக்திகளுக்கு எங்கிருந்து யார் பாடம் புகட்டுகிறார்களோ தெரியாது. மதுரையில் இருந்து நாங்கள் பாடம் புகட்டுவோம். நான் ஒரு இந்தியன், இந்து என்கிற அடிப்படையில் நாங்கள் எல்லாம் தக்க பாடம் புகட்டும் காலம் ஏற்படும்.
வேடிக்கை பார்க்க மாட்டோம்
அரசியல் நாடகமாடி தன் சுயலாபத்திற்காக எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் பிறந்த மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம். நாங்கள் பொறுமையாக இருப்பதற்கு காரணம் தேசத்தை ஆளுகின்ற புனிதமான இயக்கத்தை சார்ந்த காரிய கர்த்தர்கள் என்கிற அடிப்படையில் தான் பொறுமையாக இருக்கின்றோம்.
நாக்கை வெட்டுவோம்
அந்தப் பொறுப்பை எப்போது துறந்து நான் இந்தியன், இந்து என்கிற நிலைக்கு வருகிறோமோ அன்று அவர்களுடைய நாக்கு அவர்கள் உடலில் இருக்காது. இதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் பரவாயில்லை. இந்து மக்களையும், இந்து தேசத்தையும் பிரிக்கும் எந்த ஒரு தீய சக்தியின் நாக்கை வெட்டுவதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். அதற்காக சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.