பிடிஆர் கார் மீது விழுந்த “சின்ட்ரெல்லா” செருப்பு.. வேட்டையை தொடங்கிய போலீஸ்! ஓடி ஒளிந்த பாஜக தலைகள்
மதுரை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமறைவாகி இருக்கின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வழக்கு
அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

10 பேர் கைது
முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் சரவணனையும் கைது செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் வலைவீச்சு
இதுவரை 10 பேர் கைதான நிலையில், புகைப்படங்கள், வீடியோக்களில் இடம்பெற்ற பாஜகவினரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே விமான நிலையத்துக்கே செல்லாத தங்கள் கட்சியினரை எல்லாம் காவல்துறை கைது செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தலைமறைவு
இதன் காரணமாக அக்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் தாங்களும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எண்ணி தலைமறைவாகிவிட்டார்கள். இதுகுறித்து 2 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாஜக நிர்வாகி ராஜரத்தினம் தெரிவிக்கையில், பாஜகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications